கும்பலாகக் கூடி 10-ம் வகுப்பு மாணவனை தாக்கிய ஆசிரியர்கள்: அவமானத்தால் சிறுவன் தற்கொலை!!
குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆசிரியர்களின் துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
காயத்ரி வித்யாலயா என்ற பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவன் பிரகாஷ் சௌகன். நேற்று பள்ளிக்குச் சொந்தமான கேமராவை சேதப்படுத்தியதற்காக 4 ஆசிரியர்கள் பிரகாஷை அழைத்து விசாரித்தனர். பயந்துபோன பிரகாஷ் தெரியாமல் இப்படி நடத்து விட்டதாகவும் தன்னை மன்னித்து விடும்படியும் அழுது கொண்டே கூறினான். இதை ஏற்றுக் கொள்ளாத அந்த 4 ஆசிரியர்களும் சேர்ந்து அவனை அடித்துத் துன்புறுத்தினர்.
பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பிரகாஷ் அவமானம் தாங்க முடியாமல் தனது அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டான். இதனால் தாங்க முடியாத வேதனை அடைந்த பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்தனர்.
ஆவேசத்துடன் பள்ளிக்குச் சென்ற அவர்களுடன் சம்பவத்தைக் கேள்விப்பட்ட பொதுமக்களும் சேர்ந்து கொண்டனர். பள்ளிக்குச் சொந்தமான பொருட்களை அடித்து நொறுக்கி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மாணவனின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் பிரச்சினை ஏற்படாமல் இருக்க இறுதி சடங்கு வரை உடன் இருந்தனர். சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு ஆசிரியர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating