மனைவியை கொன்ற கூலித்தொழிலாளி கைது: சந்தேகத்தால் கொன்றதாக வாக்குமூலம்!!
கோவை பொள்ளாச்சி அருகேயுள்ள சூளேஸ்வரன் பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 27). இவரது மனைவி ரேவதி (24). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகின்றன. 4 வயதில் குழந்தை உள்ளது. முருகேசனுக்கு குடிப்பழக்கம் உண்டு.
தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவார். வீட்டில் ரேவதி யாருடனாவது போன் பேசிக் கொண்டிருந்தால் அவருக்கு சந்தேகம் ஏற்படும். இதன் காரணமாக அவரிடம் முருகேசன் சண்டை போடுவார்.
வழக்கம் போல் சம்பவத்தன்று குடித்து விட்டு வீட்டுக்கு வந்த முருகேசன் மனைவி ரேவதியின் மீது சந்தேகப்பட்டு பேசினார். இதனால் மனமுடைந்த ரேவதி உன்னுடன் வாழ்வதை விட சாவதே மேல் என்றும் தற்கொலை செய்வதாகவும் கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த முருகேசன் உன்னை நானே கொல்கிறேன் என்று கூறி துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி மனைவி ரேவதியை கொலை செய்தார். பின்னர் உறவினர்களிடம் மனைவி உடல்நலமின்றி இறந்து விட்டதாக தெரிவித்தார்.
தகவலறிந்து திருச்சியில் இருந்து பொள்ளாச்சிக்கு வந்த ரேவதியின் தாய் ராணி பொள்ளாச்சி கிழக்கு போலீசில் மகள் சாவில் மர்மம் இருப்பதாக புகார் செய்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பொள்ளாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி தலைமையில் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்–இன்ஸ்பெக்டர்கள் ராதா, கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரேவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில் கழுத்தை நெரித்து ரேவதி கொலை செய்யப்பட்டதாக அறிக்கை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் முருகேசன் பொள்ளாச்சி டவுன் கிராம நிர்வாக அலுவலர் தேவதாசிடம் சரணடைந்தார்.
இது குறித்து தேவதாஸ் பொள்ளாச்சி கிழக்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து சென்று முருகேசனை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது முருகேசன் சந்தேகத்தில் மனைவியை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். அவரை பொள்ளாச்சி ஜே.எம்.1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Average Rating