இலங்கை பிரச்சனை : வெளிப்படையான அணுகுமுறை தேவை – ராமதாஸ்!
இலங்கை இனப்பிரச்சனையில் மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளும், அந்நாட்டுடன் நடத்தும் பேச்சுவார்த்தையும் வெளிப்படையானதாக இருக்கும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்! சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவர் ராமதாஸ், இலங்கையில் தமிழ் இனத்தை அழித்துவரும் அப்பட்டமான மனித உரிமை மீறலில் துணிந்து ஈடுபட்டு வரும் இலங்கை அரசிற்கு இரண்டு ராடார்களை இந்திய அரசு வழங்கியது தவறாகும் என்று குற்றம்சாட்டினார்.
மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் தமிழர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்க வேண்டும் என்று கூறிய ராமதாஸ், இலங்கை ராணுவத்திற்கு ராடார் அளித்ததன் மூலம் அந்நாட்டு அரசின் தமிழர் விரோத நடவடிக்கைகளை ஊக்கப்படுத்துவதாக ஆகிறது என்று கூறினார்.
இலங்கை அமைச்சர் சமரசிங்கேயின் டெல்லி வருகை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, இனப்பிரச்சனை தொடர்பாக இலங்கை அரசுடன் மத்திய அரசு நடத்தும் பேச்சுவார்த்தைகள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறினார்.