கண்காணிப்புக் குழுவை மாற்றியமைக்க வேண்டும்: சு.ப.தமிழ்ச்செல்வன்
இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவை செப்ரெம்பர் 1-க்குள் மாற்றியமைக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சு.ப.தமிழ்ச்செல்வன் கூறுகையில்,
ஐரோப்பிய ஒன்றியக் கண்காணிப்புக் குழுவினர் இடம்பெறும் நிலையில் அவர்களை சந்தேகக்கண் கொண்டுதான் தமிழ் மக்கள் பார்க்க நேரிடும். விடுதலைப் புலிகளை தடை செய்துள்ள ஒரு நாட்டைச் சேர்ந்தவர் நடுநிலையோடு செயற்பட முடியாது என்றார்.
சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளர் பாலித கோகென்ன கூறுகையில், ஒருதலைபட்சமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை திருத்த முடியாது. எம்முடன் கலந்து ஆலோசனை நடத்த வேண்டும் என்றார்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தொர்பினூர் ஓமர்சன், இந்தச் சூழலுக்கு முகம் கொடுக்க ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஒவ்வொரு நாடும் முயற்சிக்கிறது என்றார்.
விடுதலைப் புலிகளை தடை செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 37 பேர் கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.