கேரளாவில் நள்ளிரவு வானத்தில் இருந்து பலத்த சத்தத்துடன் விழுந்த தீப்பிழம்பு: பொதுமக்கள் ஓட்டம்!!
கேரளாவின் எர்ணாகுளம், கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பிற்பகலுக்கு மேல் வானம் திடீரென மேக மூட்டத்துடன் காணப்பட்டது. வெயில் குறைந்தாலும் புழுக்கம் அதிகமாக இருந்தது. இரவு ஆன பின்பும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை.
நேரம் செல்ல செல்ல உஷ்ணமாகவே இருந்தது. நள்ளிரவு 10 மணி அளவில் திடீரென வானத்தில் பலத்த சத்தம் கேட்டது. புழுக்கத்தால் வீட்டில் தூங்க முடியாமல் தவித்த பொதுமக்கள் சத்தம் கேட்டதும் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
அப்போது வானத்தில் பெரிய தீப்பிழம்பு தென்பட்டது. அதிர்ச்சியுடன் அதனை உற்று நோக்கிய மக்கள் அந்த தீப்பிழம்பு தரையை நோக்கி வந்ததை கண்டதும், அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். கொச்சி, எர்ணாகுளம் மட்டுமின்றி முளதுருத்தி, கோளஞ்சேரி, எரூர், பரவூர் ஆகிய பகுதிகளிலும் இந்த தீப்பிழம்பு தென்பட்டது.
இதனால் கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள மக்கள் நேற்று தூக்கமின்றி விடிய விடிய விழித்திருந்தனர். இந்த நிகழ்வு சுமார் அரை மணி நேரம் நடந்தது. ஆதிரபுழா பகுதியில் உள்ள ஒரு ஆலயத்தில் அந்த தீப்பிழம்பு பயங்கர சத்தத்துடன் விழுந்ததாக அப்பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் கூறும் போது, வானத்தில் இருந்து வால் நட்சத்திரம் போல தென்பட்ட தீப்பிழம்பு மெல்ல மெல்ல கீழ் நோக்கி வந்தது. அருகே நெருங்கி வரும்போது அது தீப்பிழம்பாக மாறியது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த தீப்பிழம்பு ஆலய வளாகத்தில் விழுந்தது. ஆனால் அங்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தெரியவில்லை என்றனர்.
இந்த தகவல் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கும், வானிலை இலாகா அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. மேலும் தீயணைப்பு படையினரும், சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை என முதல் கட்டத்தகவல்கள் தெரிவிக்கிறது.
இருந்தும் இந்த ஆச்சரிய சம்பவத்திற்கான காரணம் என்ன? என்பது பற்றி அறிவியல் மைய விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள்.
தீப்பிழம்பு விழுந்த பின்பு மாநிலத்தின் பல பகுதிகளிலும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இன்று காலையிலும் பல இடங்களில் மழை நீடித்தது.
Average Rating