நெல்லை அருகே கள்ளக்காதலியை வெட்டிய தொழிலாளி தற்கொலை!!
நெல்லை டவுன் அருகே உள்ள தென்பத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சந்திரா (வயது 40). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சந்திராவுக்கும் அப்பகுதியை சேர்ந்த தொழிலாளி மூக்கன்(45) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது.இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.
இதையறிந்த முருகன், மனைவியை கண்டித்துள்ளார். இருப்பினும் அவர் மூக்கனுடனான பழக்கத்தை கைவிடவில்லை. இதனால் மனமுடைந்த முருகன் உடல் நிலை பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். தன்னால்தான் கணவர் இறந்தார் என்று எண்ணி வருந்திய சந்திரா அதன்பிறகு மூக்கனுடன் பழகுவதை நிறுத்தி விட்டார். இருப்பினும் மூக்கன் அவ்வப்போது சந்திராவை சந்திக்க முயன்றுள்ளார்.
நேற்று சந்திரா வீட்டிற்கு சென்ற மூக்கன், ஏன் என்னுடன் பேச மறுக்கிறாய் என்று கேட்டு தகராறு செய்துள்ளார். இதில் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த மூக்கன், தான் வைத்திருந்த அரிவாளால் சந்திராவை வெட்டி விட்டு தப்பியோடிவிட்டார். காயமடைந்த சந்திராவை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து சுத்தமல்லி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி மூக்கனை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை தென்பத்து பகுதியில் உள்ள வயலில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். அப்போது அங்கு இறந்து கிடந்தது போலீசாரால் தேடப்பட்டு வந்த மூக்கன் என்பது தெரியவந்தது. போலீசுக்கு பயந்து அவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating