இந்திய எம்.பிக்களை அனுப்ப கோரிக்கை
இலங்கைப் பிரச்சினை குறித்து இலங்கை அரசுடன் பேச இந்தியாவிலிருந்து எம்.பிக்கள் குழுவை அனுப்ப வேண்டும் என்று இலங்கையைச் சேர்ந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் எம்.பியான அனந்தசங்கரி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இலங்கையில் 50 ஆண்டுகளாக இனப் பிரச்சினை தொடர்ந்து கொண்டுள்ளது. அவ்வப்போது ஏதாவது தீர்வு ஏற்படுவது போலத் தோன்றினாலும் எதுவுமே நிரந்தரமாக அமைதியைக் கொண்டு வரவில்லை.
தற்போது விரைவில் தீர்வு கிடைக்கும் சூழ்நிலை நெருங்கி வருகிறது. இப்போது இந்தியா இப்பிரச்சினையில் தலையிட வேண்டியது அவசியம். இதற்காக இந்திய எம்.பிக்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பி இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
எம்.பிக்கள் குழுவை தமிழர் பகுதிகளுக்கும், சிங்களர் வாழும் பகுதிகளுக்கும் அனுப்பி உண்மை நிலையைக் கண்டறிய ஏற்பாடு செய்ய வேண்டும். இந்தியாவில் தமிழகத்திற்கு மத்திய அரசு என்னெனன் அதிகாரங்களை வழங்கியுள்ளதோ, அதேபோல தமிழர்கள் வாழும் பகுதிக்கு இலங்கை அரசு அதிகாரங்கள் வழங்க வேண்டும். இதை இந்தியா தான் வலியுறுத்திக் கூற வேண்டும் என்றார் அனந்தசங்கரி.
ஐந்து நாட்கள் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யும் அனந்தசங்கரி இந்து பத்திரிக்கை ஆசிரியர் ராம், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன், துக்ளக் ஆசிரியர் சோ ஆகியோரை சந்தித்துப் பேசினார். முதல்வர் கருணாநிதியையும் அவர் சந்திக்க முயன்று வருகிறார்.