பிஜீ தீவில் கப்பலில் இருந்து கடலில் குதித்து வாலிபர் தற்கொலை!!
ஆஸ்திரேலியா அருகே உள்ள பிஜீ தீவில் கப்பலில் இருந்து கடலில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அவர் பண்ருட்டியை சேர்ந்த கப்பல் ஊழியரா? என விசாரணை நடந்து வருகிறது.
பண்ருட்டியை அடுத்த மேட்டாமேடு கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி, விவசாயி. இவரது மகன் பார்த்தீபன் (வயது 28). சமையற்கலையில் (கேட்டரிங்) பட்டம் பெற்றவர். இவர், கடந்த ஆண்டு ஜுன் மாதம் அமெரிக்காவை சேர்ந்த தனியார் கப்பல் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அதன்பிறகு பெற்றோருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார்.
கடந்த ஜுலை 5–ந் தேதிக்கு பிறகு அவர் செல்போனில் குடும்பத்தினரை தொடர்பு கொள்ளவில்லை. அவரது செல்போன் ‘சுவிட்ச்–ஆப்’ செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பலவித முயற்சி எடுத்தும் பார்த்தீபன் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
எனவே கடலூர் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டிடம் தங்களுடைய மகனை கண்டுபிடித்து தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பத்திரிகையில் பிஜீ தீவை அடுத்த வானூவத்து கடற்பகுதியில் கப்பலில் இருந்து ஒரு வாலிபர் நடுக்கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும், அந்த வாலிபரின் உடலை மீட்க முடியவில்லை என்றும் செய்தி வெளியாகியிருந்தது. மேலும் அந்த கப்பலில் ஊழியராக வேலை செய்து வந்த பார்த்தீபனை காணாததால் கடலில் குதித்து இறந்தவர்அந்த வாலிபராக இருக்கலாம் என கருதப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பார்த்தீபனின் குடும்ப நண்பர் ஒருவர் இந்த செய்தியை அறிந்து திடுக்கிட்டார். அந்த பத்திரிகை செய்தியை மேட்டாமேடு கிராமத்தில் வசிக்கும் பார்த்தீபனின் விலாசத்துக்கு அனுப்பி வைத்து தகவல் கொடுத்தார். இதனை கேட்ட பார்த்தீபனின் குடும்பத்தினர் கதறி துடித்தனர்.
இதுபற்றி கடலூர் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பிஜீ தீவு பகுதியில் கப்பலில் இருந்து கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டவர் மேட்டாமேடு கிராமத்தை சேர்ந்த பார்த்தீபன் தானா? என உறுதி செய்ய கலெக்டர் சுரேஷ்குமார் உடனடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
Average Rating