முழுக்க முழுக்க மலேசியாவில் படமாகும் கில்லி பம்பரம் கோலி!!
நாசர், அஞ்சலி நடித்த மகாராஜா என்ற படத்தை இயக்கியவர் மனோஹரன். இவர் தற்போது இயக்கி வரும் படம் ‘கில்லி பம்பரம் கோலி’. ஸ்ரீ சாய் பிலிம் சர்க்யூட் என்ற பட நிறுவனம் அதிகப் பொருட் செலவில் இந்த படத்தை முழுக்க முழுக்க மலேசியாவிலேயே படமாக்க திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தின் கதாநாயகர்களாக நரேஷ், பிரசாத், தமிழ் ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக புதுமுகம் சந்தோஷ்குமார் நடிக்கிறார். கதாநாயகியாக தீப்திஷெட்டி அறிமுகமாகிறார். மற்றும் கஞ்சா கருப்பு, தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
பிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு நாக கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து மனோஹரன் இயக்குகிறார்.
படம் பற்றி இவர் கூறும்போது, ‘‘நமது பாரம்பரிய விளையாட்டுகளான கில்லி, பம்பரம், கோலி போன்ற விளையாட்டுக்கள் இன்றைய நவீன யுகத்தில் மறைந்து கொண்டிருக்கிறது. தெருவில் இறங்கி விளையாடுவது என்பது இன்று குறைந்துவிட்டது. செல்போன் டெலிவிஷன், இன்டர்நெட் போன்ற நவீனங்கள் தெரு விளையாட்டை மாற்றிவிட்டது. கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி போன்ற நவீன விளையாட்டுக்கள் கில்லி, பம்பரம், கோலி போன்ற விளையாட்டின் சக்தியை குறைத்துவிட்டது.
கில்லி, பம்பரம், கோலி போன்ற விளையாட்டை முழுமையாக உணர்ந்து எக்ஸ்பர்ட்டான நான்கு பேர் தொழில் நிமிர்த்தமாக மலேசியா சென்று அங்கே அவர்களுக்கு உருவான ஒரு பிரச்சனைக்கு இந்த விளையாட்டுக்களைப் பயன்படுத்தி எப்படி தீர்த்துக் கொள்கிறார்கள் என்பது கதை!
பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்ட அந்த விளையாட்டுகள் அந்த நால்வரின் வாழ்க்கைக்கு எப்படி உபயோகமாகிறது என்பதை கலகலப்பாக உருவாக்கி உள்ளோம்’’ என்றார்.
Average Rating