கதாநாயகிகள் நிலைமை பரிதாபம்….!!
அன்று முதல் இன்று வரை நடிப்பால் ஜொலித்து வரும் நடிகை லட்சுமி. இவர் தற்போது எஸ்.பி.பி.யுடன் இணைந்து ‘மூணே மூணு வார்த்தை படத்தில் நடித்து வருகிறார். நான்காம் தலைமுறை நடிகர்களோடு நடித்து வரும் இவர், இத்தலைமுறை நடிகர்களின் சினிமா அணுகுமுறையை கண்டு வியந்துள்ளார். ‘மூணே மூணு வார்த்தை’ தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகி வருகிறது.
இப்படம் குறித்து லட்சுமி கூறும்போது, “இப்படத்தில் நடித்த அனைவருமே எனக்கு பரிச்சயம் இல்லாதவர்கள். இவர்களுடன் நடிப்பது எனக்கு புது அனுபவமாய் இருந்தது. நகைச்சுவை கலந்த காதல் படத்தை முழுக்க முழுக்க வித்தியாசமான கதை களத்தில் தந்திருக்கிறார் இயக்குனர் மதுமிதா. எஸ்.பி.பி தெலுங்கில் ‘மிதுனம்’ என்ற படத்தில் நடித்தது பெரிதும் பேசப்பட்டது.
அதை தொடர்ந்து தமிழில் நாங்கள் இணையும் முதல் திரைப்படம் மூணே மூணு வார்த்தை. முதலில் எங்களை நாயகனின் அப்பா அம்மாவாகத்தான் நடிக்க சொன்னார் மதுமிதா. நாங்கள் சற்று தயங்கியதை தெரிந்தவுடன் உடனே சில மாறுதல்களுடன் தாத்தா பாட்டி கதாப்பாத்திரங்களாக மாற்றியமைத்தார் இயக்குனர். எனக்கு பாட்டியாக நடிப்பதில் எந்த தயக்கமும் இல்லை. உண்மையில் நான் பாட்டிதானே.
மதுமிதாவுடன் பணிபுரிந்த அனுபவங்களை பற்றி கேட்டபோது, இன்றைய காலகட்டத்தில் பெண் இயக்குனர்கள் மிகுந்த அனுபவத்தோடும், சினிமாவை பற்றிய ஆழ்ந்த சிந்தனையுடன் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். மதுமிதா தனக்கு என்ன வேண்டுமென்று நன்கு அறிந்தவர். அத்தகைய தெளிவு இல்லாமல் குறுகிய காலத்தில் இரு மொழி படத்தை இயக்குவது சாத்தியமன்று.
தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் நிலைமைதான் மிகவும் பரிதாபத்துக்கு உரியவை. அவர்கள் இன்னும் வியாபாரத்துக்கான ஒரு பொம்மையாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்.” எனப் பளிச்சென்று கூறினார்.
“இப்படத்தில் நடித்த அர்ஜுன், வெங்கி, அதிதி மற்றும் இயக்குனர் மதுமிதா அவர்களுக்கு எனது மானமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த படத்தை தயாரிக்கும் எஸ்.பி.சரணுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ‘மூணே மூணு வார்த்தை’ திரைப்படம் குடும்பத்துடன் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஒரு திரைப்படம்.” எனக் கூறி விடை பெற்றார் லட்சுமி.
Average Rating