எய்ட்ஸ் நோய் தாக்கிய மனைவி-மகள்களை எரித்துக் கொன்ற என்ஜினீயர் போலீசில் சரண்!!
மத்திய பிரதேசத்தில் எய்ட்ஸ் நோய் தொற்று தாக்கியதால் என்ஜினீயர் ஒருவர் தனது மனைவி மற்றும் 2 மற்றும் 9 வயது உள்ள 2 குழந்தைகளை எரித்து கொன்று போலீசில் சரண் அடைந்தார். இந்த பயங்கர சம்பவம் கடந்த மார்ச் 3 ந்தேதி மத்திய பிரதேசம் பிடுல் மாவட்டம் முல்டை என்னும் நகரில் நடந்து உள்ளது.
40 வயதான அந்த என்ஜினீயர் மத்திய பிரதேச மாநிலம் பண்டல்கண்டில் உள்ள ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
மகாராஷ்டிராவின் அமராவதி நகரில் போலீசில் சரண் அடைந்த அந்த என்ஜினீயர், தனது சொந்த ஊரான அமராவதிக்கு சென்று விட்டு குடும்பத்துடன் காரில் திரும்பியபோது தானும் தன் மனைவியும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆனால் இது படுகொலை என்று மனைவியின் சகோதரர் சந்தேகம் தெரிவித்துள்ளார். எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டு உள்ளதை கடந்த 7 மாதங்களுக்கு முன்புதான் அந்த தம்பதியினர் அறிந்துள்ளனர். இதனை அடுத்து அவர்கள் இருவரும் தங்களது மகள்களுக்கும் பரிசோதனை செய்துள்ளனர். அவர்களுக்கும் பாதிப்பு இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28ந்தேதி அவர்கள் குடும்பத்துடன் அமராவதி நகருக்கு சென்றுள்ளனர். அவர்கள் திரும்பி வரும்போது, அந்த நபர் முல்டை நகரில் கானாபூர் மலைப் பகுதியில் காரை நிறுத்தியுள்ளார். அதன்பின் கார் மீது பெட்ரோலை ஊற்றி தீப்பற்ற வைத்து விட்டு தானும் உள்ளே குதித்து விட்டார். காருக்குள் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை காப்பாற்ற நினைத்த அவரின் மனைவி, தனது கணவரிடம் அவர்கள் இந்த பாதிப்பிற்கு எந்த வகையிலும் பொறுப்பில்லை என்ற நிலையில் அவர்களை காப்பாற்றும்படி கூறியுள்ளார்.
இதனை அடுத்து அந்நபர் காரில் இருந்து வெளியே வந்து குழந்தைகளை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால், தீ பற்றி எரிந்து கார் முற்றிலும் கருகி விட்டது.
அதன்பின் அவர் மும்பை மற்றும் நாக்பூர் நகருக்கு சென்று நடந்த சம்பவம் குறித்து தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். அவர்கள் கூறியதன் பேரில் போலீசில் சரணடைந்ததாக போலீசாரிடம் அந்த என்ஜினீயர் தெரிவித்துள்ளார். பின்னர் அவரை போலீசார், மத்திய பிரதேசத்தில் உள்ள முல்டை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating