போலி ஆவணம் தயாரித்து தனியார் என்ஜினீயரிங் கல்லூரியை விற்க முயன்ற 2 பேர் கைது!!
கும்பகோணம் அருகே உள்ள கோவிலாச்சேரியில் ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியை ரூ.150 கோடிக்கு விற்க இருப்பதாக மோசடி கும்பல் ஒன்று பொய்யான தகவலை பரப்பி வந்தது. இது குறித்து கல்லூரி துணைத்தலைவர் செந்தில் போலீசில் புகார் செய்தார்.
இதன்பேரில் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கும்பகோணம் பெரிய தெருவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் மோசடி கும்பல் ஒன்று போலி ஆவணங்களை வைத்துக்கொண்டு கல்லூரியை விலை பேசி வரும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. உடனே கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கிருந்த 2 பேரை பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஒருவர் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் மேலமடவிளாகத்தை சேர்ந்த வேலாயுதம்(வயது59) என்பதும், மற்றொருவர் சோழபுரம் மேலானமேடு பகுதியை சேர்ந்த பழனிவேல்(60) என்பதும் தெரியவந்தது. இதில் பழனிவேல் ஸ்போக்கன் இங்கிலீஷ் ஆசிரியர் ஆவார்.
அவர்களிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தியதில், கும்பகோணம் பழைய பாலக்கரை காமராஜ் நகரை சேர்ந்த அசோக்குமார் மற்றும் புகழேந்தி ஆகிய 4 பேர் அங்கே இருந்ததும், அவர்களில் அசோக்குமார், புகழேந்தி ஆகிய 2 பேர் அங்கிருந்து தப்பி சென்றதும் தெரியவந்தது.
மேலும் இந்த கும்பலைச் சேர்ந்த நன்னிலம் அருகே உள்ள முடிகொண்டான் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனுக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. பிடிபட்ட வேலாயுதம், பழனிவேல் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் சந்திரசேகரன் முன்னிலையில் ஆஜர்படுத்தனர். அவர்களை வருகிற 25–ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து கல்லூரியின் துணைத் தலைவர் செந்தில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:–
கடந்த 15 ஆண்டுகளாக நாங்கள் இந்த கல்லூரியை கும்பகோணம் அருகே உள்ள கோவிலாச்சேரியில் நடத்தி வருகிறோம். இந்நிலையில் சதித்திட்டம் தீட்டி, கல்லூரிக்கு களங்கத்தையும், கெட்ட பெயரையும் உண்டாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த சில நாட்களாக ஒரு கும்பல் செயல்பட்டு வந்தது.
வெப் சைட்டில் இருந்த கல்லூரி பற்றிய முழு விவரத்தை பதிவிறக்கம் செய்து போலியான ஆவணங்கள் தயாரித்து கல்லூரியை ரூ.150 கோடிக்கு விற்க இருப்பதாக இடைத்தரகர்கள் புரளியை கிளப்பிவிட்டனர். இதுகுறித்து போலீசாரிடம் புகார் கொடுத்தோம். அவர்கள் முறையாக விசாரித்து தற்போது 2 பேரை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating