வாகன சோதனையின் போது சப்–இன்ஸ்பெக்டரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி: டிரைவர் கைது!!
களியக்காவிளை போலீஸ் பயிற்சி சப்–இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் போலீசார் நேற்று தாளச்சன்விளை சோதனைசாவடியில் வாகனசோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஒரு டிப்பர் லாரியை மறித்தனர். லாரியை நிறுத்திய டிரைவர் போலீசாரை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டினார். மேலும் நீங்கள் உயிரோடு இருந்தால் எங்களால் தொழில் செய்ய முடியாது எனக்கூறி போலீசார் மீது லாரியை ஏற்றப்பார்த்தார்.
சுதாரித்துக்கொண்ட போலீசார் ஒதுங்கி உயிர் தப்பினர். பின்னர் போலீசார் லாரியை விரட்டினர். போலீசார் துரத்துவதைப்பார்த்த டிரைவர் சிறிது தூரத்தில் லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓட முயன்றார். எனினும் போலீசார் விடாமல் அவரை துரத்திப்பிடித்தனர்.
லாரியை சோதனை செய்த போது அதில் உரிய அனுமதியின்றி மணல் கேரளாவுக்கு கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து லாரி டிரைவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்த லெட்சுமணன் (வயது 53) என்பது தெரிய வந்தது. இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டது.
இச்சம்பவத்தில் லாரி உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
Average Rating