நிராதரவாக விடப்பட்ட 3 குழந்தைகள்: ட்விட்டரின் உதவியால் தாயுடன் சேர்ந்தனர்!!
தனது உறவினர்களை சந்திப்பதற்காக அபிசேக் என்பவர் நேற்றிரவு டெல்லி ரயில் நிலையத்திற்குச் சென்றிருந்தார். அப்போது 16வது நடைமேடையின் நுழைவு வாயிலருகே 2 சிறுவர்களும், 1 சிறுமியும் ஆதரவற்ற நிலையில் பயந்து நடுங்கியபடி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக தனது ஸ்மார்ட்போனில் அவர்களைப் புகைப்படம் எடுத்த அபிசேக், அதை சமூக வலைதளமான ட்விட்டரில் பதிவேற்றி “யாராவது இந்த குழந்தைகளின் பெற்றோரைக் கண்டுபிடிக்க உதவுங்கள்” என்ற குறிப்புடன் ட்வீட் செய்தார். ட்விட்டரில் இந்த ட்வீட் அசுரவேகத்தில் பரவத் தொடங்கியது. மூத்த பத்திரிக்கையாளர்கள் உட்பட பலர் உடனடியாக அபிசேக்கை தொடர்பு கொண்டனர்.
’உதய் அறக்கட்டளை’ என்ற தொண்டு நிறுவனம் அந்த குழந்தைகளை ரெயில் நிலையத்திலிருந்து அழைத்துச் சென்றது. இந்த ட்விட்டைப் பார்த்த டெல்லி போலீசார் உடனடியாக களத்தில் இறங்கினர். தொண்டு நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சென்று அந்த குழந்தைகளிடம் மெல்ல நடந்த சம்பவத்தைப் பற்றி விசாரித்தனர். அப்போது ருமானா(7), ராஜா (5), சான்யா(4) மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவரது தந்தை அவர்களை நிராதரவாக ரெயில் நிலையத்தில் விட்டுச் சென்றதும் தெரிய வந்தது.
மேலும் கான்பூர் நகரில் உள்ள நபி கரிம் பகுதியில் அவர்கள் வீடு இருப்பதும் தெரிய வந்தது. உடனடியாக அப்பகுதிக்கு சென்ற போலீசார் குழந்தைகளை பத்திரமாக அதன் தாயிடம் ஒப்படைத்தனர். தனது கணவரின் மோசமான நடவடிக்கைகள் குறித்து அவர் போலீசிடம் புகாரளித்தார். தற்போது அந்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Average Rating