இஸ்ரேல் படை வீரரை விடுவிக்க மறுப்பு:- பாலஸ்தீன இயக்கத்தின் மீது…
பாலஸ்தீன ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட இஸ்ரேல் படை வீரரை விடுவிப்பதற்காக அந்த இயக்கம் விடுத்த நிபந்தனைகளை ஏற்க இஸ்ரேல் மறுத்துவிட்டது. அதேவேளையில் பாலஸ்தீனத்தின் மீதான தனது நெருக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. காசா நிலப்பரப்பில் கடந்த ஜூன் 25-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்திய ஹமாஸ் இயக்கத் தீவிரவாதிகள் இஸ்ரேலிய வீரரைக் கடத்திச் சென்றனர்.
இஸ்ரேல்ராணுவ வீரர் ஒருவரை பாலஸ்தீன ஹமாஸ் தீவிரவாத இயக்கத்தினர் கடத்திச் சென்றனர். இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்களை விடுதலை செய்யாவிட்டால் செவ்வாய்க்கிழமை அவரை கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டல் விடுத்திருந்தது.
ஹமாஸ் இயக்கத்தின் கோரிக்கையை ஏற்க ஆரம்பம் முதலே இஸ்ரேல் மறுத்து வருகிறது. அதேசமயம் அனைத்து வகையிலும் பாலஸ்தீனத்துக்கு நெருக்குதல்களை அளித்து வருகிறது.
ஹமாஸ் தீவிரவாத இயக்கத்தின் ராணுவப் பிரிவு செய்தித் தொடர்பாளருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முடியவில்லை, கடத்தப்பட்ட இஸ்ரேல் வீரரின் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை, அவரது பெயர் கிலாத் ஷாலித் என்று தெரியவந்துள்ளது.
ஹமாஸ் தீவிரவாத இயக்கத்துடன் பேச்சு நடத்தும் கேள்விக்கே இடமில்லை என்று இஸ்ரேல் பிரதமர் ஆல்மர்ட் நிராகரித்துவிட்டார்.
இஸ்ரேல் வீரரை விடுவிக்க வேண்டுமானால் சிறையில் உள்ள பாலஸ்தீனியர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று ஹமாஸ் இயக்கத்தின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான ஒசாமா ஹாம்தன் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார். இவர் பல ஆண்டுகள் பாலஸ்தீனத்தை விட்டு வெளிநாட்டில் வசித்துவந்த முக்கியத் தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு கரைப் பகுதியில் பாலஸ்தீன தீவிரவாதி ஒருவரை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றது. மேற்கு கரைப் பகுதியில் அமைந்துள்ள ஜெனின் நகரில் செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் நடைபெற்றது. இஸ்ரேலியப் படைகளுக்கும், பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் அவர் இறந்தார், இந்த தீவிரவாத இயக்கம் உள்ளூரில் செயல்படக் கூடியது. ஜெனின் நகரில் இஸ்ரேல் ராணுவ ஜீப் மீது வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்த முற்பட்டபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.