மேற்கு வங்காளத்தில் கற்பழிக்கப்பட்ட கன்னியாஸ்திரி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்!!
மேற்கு வங்காள மாநிலம் ரானாகாட் பகுதியில் உள்ள பள்ளியில் 72 வயது கன்னியாஸ்திரி கற்பழிக்கப்பட்டார். பள்ளியில் இருந்த பணம் மற்றும் லேப்டாப், செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் இந்த கொடூர செயலில் ஈடுபட்டு தப்பி ஓடிவிட்டது. இதுபற்றி அறிந்ததும் முதல்–மந்திரி மம்தா பானர்ஜி அதிர்ச்சி அடைந்தார். சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்ட அவர் குற்றவாளிகளை கண்டு பிடிக்க போலீஸ் படையை முடுக்கி விட்டார்.
எதிர்க்கட்சிகளும், தொண்டு நிறுவனங்களும், இந்த சம்பவத்தை கண்டித்து மேற்கு வங்காளத்தில் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மாணவர்கள் அமைப்பு ரானாகாட் பகுதியில் நேற்று 12 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடத்தியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக மாநில அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தர விட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. இன்னும் ஓரிரு நாளில் சி.பி.ஐ. விசாரணையை தொடங்க உள்ளது. இதுவரை யாரும் பிடிபடாததால் உள்ளூர் போலீசார் திணறி வருகிறார்கள்.
குற்றவாளிகள் எடுத்துச் சென்ற செல்போன் மூலம் அவர்கள் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்து வருகிறார்கள். தற்போது அவர்கள் பக்கத்து மாநிலங்களில் பதுங்கி உள்ளது தெரிய வருகிறது. இதையடுத்து பக்கத்து மாநில போலீசாருடன் உள்ளூர் போலீசார் தொடர்பு கொண்டுள்ளனர்.
இதற்கிடையே கற்பழிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு கொல்கத்தா ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று அதிகாலை அவர் டிஸ்சார்ஜ் ஆனார். அவருடன் ஒரு டாக்டர், ஒரு போலீஸ்காரரும் பாதுகாப்பாக சென்றனர்.
கன்னியாஸ்திரி யாருக்கும் தெரியாதபடி ரகசிய இடத்தில் தங்கி இருக்க முடிவு செய்துள்ளனர். இதனால் அவர் தங்கியுள்ள இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
Average Rating