சின்னக்கரை தர்காவில் கள்ளக்காதலியை அம்மிக்கல்லால் அடித்து கொல்ல முயற்சி: வாலிபர் கைது!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள காமராஜ் நகரை சேர்ந்தவர் நவாஸ் (வயது 38). இவருக்கும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ராஜாத்தி (40) என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.
இதையடுத்து கணவரை பிரிந்த ராஜாத்தி பல்லடம் அருகேயுள்ள இடுவாய் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து நவாஸ் உடன் குடும்பம் நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நவாசுக்கும், ராஜாத்திக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் ராஜாத்தியை பிரிந்து பொள்ளாச்சிக்கு நவாஸ் சென்றார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு நவாஸ் பல்லடம் வந்தார். ராஜாத்தியை சந்தித்து சமாதானம் பேசி அவருடன் தங்கினார். நேற்று நவாசும், ராஜாத்தியும் திருப்பூர்–பல்லடம் ரோட்டில் உள்ள சின்னக்கரை தர்காவுக்கு தொழுகைக்காக சென்றனர்.
அங்கு தொழுகை முடிந்து இரவு தர்காவிலேயே இருவரும் தங்கினர். அப்போது நவாசுக்கும், ராஜாத்திக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இன்று அதிகாலை 2 மணியளவில் ஆத்திரமடைந்த நவாஸ் அம்மிக்கல்லை எடுத்து ராஜாத்தியின் தலையில் போட்டார். இதில் வலி தாங்கமுடியாமல் அலறிய ராஜாத்தி மயங்கினார்.
தர்க்காவில் தங்கியிருந்த பக்தர்கள் நவாசை பிடித்தனர். பின்னர் ராஜாத்தியை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
சம்பவம் குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் நவாசை கைது செய்தனர்.
இதற்கிடையே சிகிச்சை பெற்று வந்த ராஜாத்தியின் உடல்நிலை மோசமானதால் அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
Average Rating