போலீஸ் கையாள் என நினைத்து கூட்டாளியை சுட்டுக் கொன்றவனை அடித்துக் கொன்ற கிராம மக்கள்!!
உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் மாவட்டத்தில் 6 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு கொலை தொடர்பாக போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் குற்றம் சாட்டப்பட்ட ஷபிர் (36) உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஹஸ்மத் (35) என்பவன் மட்டும் தலைமறைவாக இருந்து வருகிறான். ஹஸ்மத்தின் இருப்பிடத்தைப்பற்றி போலீசாருக்கு ஷபிர் உளவுத்தகவல்களை கூறிவருவதாக ஹஸ்மத்துக்கு தெரியவந்தது.
இதனையடுத்து, ஷபிர் வசிக்கும் இந்த்ரிஷ்பூர் கிராமத்துக்கு நேற்று மாலை சென்ற ஹஸ்மத் அவரை கண் மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுக்கொன்றான். சத்தம் கேட்டு ஷபிரின் வீட்டருகே விரைந்து வந்த கிராம மக்கள் கையில் துப்பாக்கியுடன் நின்றிருந்த ஹஸ்மத்தை பிடித்து, பிரம்பு, உருட்டுக்கட்டை போன்றவற்றால் சரமாரியாக தாக்கினர். அடிதாங்க முடியாமல் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த ஹஸ்மத் அந்த இடத்திலேயே உயிரிழந்தான்.
இச்சம்பவம் பற்றிய தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், இரு பிரேதங்களையும் கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating