தூத்துக்குடியில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை: போலீசார் தீவிர விசாரணை!!
தூத்துக்குடி சின்மயார் காலனியை சேர்ந்தவர் ஜான். இவரது மனைவி துளசியம்மாள். கடந்த 15 நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டனர்.
இந்நிலையில் இன்று காலை அவர்களது வீட்டின் மாடியில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் தென்பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். அப்போது அவரது உடல் அழுகியிருந்தது. மேலும் உடலின் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தது. இதனால் அவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
கொலை செய்யப்பட்டவர் யார், அவரை கொலை செய்த மர்மநபர்கள் யாரென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் தூத்துக்குடி கேம்ப்–2 பகுதியை சேர்ந்த கவாஸ்கர் (வயது 29) என்பது தெரியவந்தது. அவர் மீது ஊட்டி, கொடைக்கானல் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின்கோட்னீஸ் சென்று விசாரணை நடத்தினார். இதையடுத்து கவாஸ்கர் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பழிக்குப்பழியாக கவாஸ்கர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. அவரது எதிராளிகள் மது வாங்கி கொடுத்து கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது உடலை ஆளில்லாத ஜான் வீட்டில் தூக்கி வீசி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர். பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating