செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வாலிபர் படுகொலை: போலீசார் விசாரணை!!
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையையெட்டி உள்ளது. இங்குள்ள பழைய புறநோயாளிகள் பிரிவு அருகே இன்று காலை 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
அவரது தோள்பட்டையிலும் தலையிலும் அரிவாள் வெட்டு காயம் உள்ளது. மேலும் தலையில் கல்லை போட்டு கொடூரமாக தாக்கி உள்ளனர்.
சிவப்பு நிறம் கொண்ட அவர் கருப்பு நிறத்தில் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டிசர்ட் அணிந்திருந்தான். அவன் யார்? எந்த ஊர் என்பது தெரியவில்லை. வடமாநில வாலிபராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தகவல் கிடைத்ததும் செங்கல்பட்டு டவுண் இன்ஸ்பெக்டர் சரவணன் போலீசாருடன் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றினார்.
புறநோயாளிகள் பிரிவு புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்ட பின்னர் பழைய கட்டிடம் அருகே ஆள் நடமாட்டம் குறைந்தது. இந்த இடத்தில் வாடகை கார்கள் நிறுத்தப்பட்டு இருக்கும். ஆனால் கார்கள் நிற்பதற்கு அனுமதி கிடையாது என்றாலும் டிரைவர்கள் இங்குதான் கார்களை நிறுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
இதனால் யார் வருகிறார்கள் என்பது தெரியாத நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் நள்ளிரவில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளி யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு மகளை பிரசவத்திற்காக அழைத்து வந்த 60 வயது முதியவர் செவிலியர் விடுதி அருகே கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating