1.28 கோடியுடன் தப்பி ஓடிய வேன் டிரைவரை 10 மணி நேரத்திற்குள் துரத்திப் பிடித்து கைது செய்த மும்பை போலீசார்!!
மும்பையின் ட்ராம்பே புறநகர் பகுதியில், ஏடிஎம் இயந்திரத்திற்கு பணம் நிரப்புவதற்காக சென்ற, வேனில் இருந்த 1.28 கோடி ரூபாயுடன் தப்பி ஓடிய வேன் டிரைவரை சம்பவம் நடந்த 10 மணி நேரத்திற்குள் மும்பை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து, போலீசார் தெரிவித்துள்ள தகவலின் படி, மும்பையில் உள்ள ’லாகி கேஷ்’ என்ற நிதி மேலாண்மை நிறுவனம், நவி மும்பையில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து பணம் நிரப்பி, அதை வேன் மூலம் கொண்டு சென்று ஏடிஎம் இயந்திரங்களில் அந்த பணத்தை வைக்கும் பணியை செய்து வருகிறது.
கடந்த 26-ம் தேதி மதியம் 2.30 மணிக்கு, மும்பையின் ட்ராம்பேயில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்புவதற்காக, வேனிலிருந்து 16 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு செக்யூரிட்டி உட்பட 3 அதிகாரிகள் இறங்கிச் சென்றனர். அப்போது வேன் டிரைவர் வேனில் இருந்த 1.28 கோடி ரூபாய் பணத்துடன் வேனை ஓட்டிக் கொண்டு தப்பி ஓடியுள்ளார்.
ஏடிஎம்-மில் பணத்தை நிரப்பி விட்டு வந்த அதிகாரிகள் வேனைக் காணாமல் அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் அளித்தனர். உடனடியாக தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார் வேனில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவியின் உதவியுடன் மதுங்கா அருகே வேன் இருப்பதைக் கண்டுபிடித்தனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய அமர்சிங்கை(24) தேடி வந்தனர்.
இந்நிலையில், 27-ம் தேதி நள்ளிரவில் தன்னுடைய சொந்த ஊரான பீகாருக்கு செல்வதற்காக கல்யாண் ரெயில் நிலையத்தில் காத்திருந்த அமர் சிங்கை குற்றவியல் பிரிவு தனிப்படை போலீசார் துரத்திப் பிடித்து கைது செய்தனர். திருடப்பட்ட பணத்தில் பாதியை அவரிடமிருந்தும் மீதியை அவர் பணத்தை மறைத்து வைத்திருந்த இடத்திலிருந்தும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைதான அமர் சிங்கை வருகிற ஏப்ரல் 4-ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.
Average Rating