இரண்டு ஆண்டுகளாக சிறைக்குள் அடைபட்டிருந்த 4 வயது சிறுமி அரசு காப்பகத்துக்கு மாற்றம்!!
ஒடிசா மாநிலத்தில் உள்ள கேந்திரபாரா மாவட்டத்தை சேர்ந்த தம்பதியரான பிஜாய் கேட்டன் பட்நாயக் மற்றும் அவரது மனைவி ரினா பட்நாயக் ஆகியோர் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு கேந்திரபாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்டபோது அவர்களின் ஒன்றரை வயது கைக்குழந்தையாக இருந்த பூனம் என்ற பெண் குழந்தையை ரினாவுடன் சிறையில் இருக்க நீதிபதி அனுமதியளித்திருந்தார். இதனையடுத்து, பெண்கள் சிறையில் தாயுடன் வளர்ந்துவந்த பூனத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. சிறையின் குறுகிய அறைக்குள் ஓடியாடி, விளையாட அவளால் முடியவில்லை.
வெளியுலக தொடர்பு ஏதும் இன்றி, நான்கு சுவர்களுக்குள் அடைபட்டு கிடப்பதால் அவளது மனவளர்ச்சியும் குன்றிவிடும். இதுதவிர சிறைக்குள் பள்ளி வசதி இல்லாததால் அவளது எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடும் வாய்ப்புள்ளது. எனவே, அவளை சிறையில் இருந்து வெளியேற்றி, ஏதாவதொரு அரசு சிறுமியர் காப்பகத்தில் சேர்த்து, அங்கு வளர்க்க உதவி புரிய வேண்டும் என பிஜாய் கேட்டன் பட்நாயக்கும் அவரது மனைவி ரினாவும் சிறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து கோரிக்கை மனுக்களை அனுப்பி வந்தனர்.
சிறைத்துறை விதிகளின்படி, தாயுடன் கைதியாக சிறைக்குள் வரும் குழந்தைகள், ஆறு வயதை அடைந்த பின்னரே அவர்களை விடுவிக்க முடியும். இந்நிலையில், இந்த கோரிக்கை மனுக்கள் தொடர்பாக என்ன செய்வது? என்று ஆலோசித்த சிறை நிர்வாகம், மாவட்ட கூடுதல் நீதிபதிக்கு இந்த கோரிக்கையை முன்மொழிந்தது.
இதை சீராய்ந்துப் பார்த்த நீதிபதி, தற்போது 4 வயது சிறுமியாக உள்ள பூஜாவை கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு அரசு காப்பகத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து, சுமார் 2 ஆண்டுகால சிறைவாசத்தில் இருந்து கடந்த வாரம் பூஜா விடுதலையானாள்.
இங்குள்ள பள்ளிஸ்ரீ கன்யாசிரமத்தில் சேர்க்கப்பட்டுள்ள பூஜா, மற்ற குழந்தைகளுடன் நெருங்கிப் பழகி வருவதாகவும், கூடிய சீக்கிரத்தில் அவர்களைப் போலவே இயல்பான நிலைக்கு வந்துவிடுவாள் என்றும் ஆசிரம நிர்வாகி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இரண்டாண்டுகள் தன்னுடன் சிறை கொட்டடியில் முடங்கிக் கிடந்த அருமை மகளை பிரிந்த துயரம் ரினாவுக்கு இருந்தாலும், மகளின் எதிர்காலம் கருதி இந்தப் பிரிவை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு மனதை தேற்றி வருகிறார்.
Average Rating