ஓடும் பஸ்சில் 1½ கிலோ நகை மாயம்: உறவினர் வீட்டில் பதுக்கிவிட்டு கொள்ளை நாடகமாடியது அம்பலம்!!
பெங்களூரைச் சேர்ந்தவர் லலித். நகைக்கடை நடத்தி வருகிறார். மேலும் நகைகள் செய்து கடைகளுக்கு சப்ளை செய்வார். இவரது கடையில் ஒசூரைச் சேர்ந்த உறவினரான வினோத் குமார்(37), மற்றும் ராகவேந்தர் ஆகியோர் வேலைபார்த்து வருகிறார்கள்.
வினோத்குமாரும், ராகவேந்தரும் 7½ கிலோ நகைகளுடன் பெங்களூரில் இருந்து இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் மூலம் திருப்பூர் வந்தனர். அங்குள்ள கடைகளுக்கு நகைகளை சப்ளை செய்தனர்.
அவற்றுக்கு உரிய பணம் மற்றும் தங்கக்கட்டிகளை பெற்றுக்கொண்டு கோவைக்கு தனியார் பஸ்சில் புறப்பட்டனர். கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே வந்திறங்கிய அவர்கள் பின்னர் ஆட்டோவில் புறப்பட்டனர்.
பெரியகடை வீதி, ராஜவீதியில் உள்ள கடைகளுக்கு நகைகளை சப்ளை செய்தனர். பின்னர் பையை பார்த்த போது அதன் அடிப்பகுதி பிளேடால் கிழிக்கப்பட்டிருந்தது.
அதில் இருந்த 1½ கிலோ நகைகைள் மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இருவரிடமும் விசாரித்தனர்.
அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார்கள். திருப்பூரில் இருந்து கோவைக்கு பஸ்சில் வந்த போது நகைப்பையை யாரோ பிளேடால் கீறி நகைகளை திருடியிருக்கிறார்கள் என்று முதலில் கூறினர்.
அப்படியென்றால் கோவையில் இறங்கியவுடனேயே புகார் செய்ய வேண்டியதுதான தானே? அதன் பின்னரும் பெரியகடை வீதிக்கு சென்று நகைகள் சப்ளை செய்தது ஏன்? என்று கேட்டபோது போது அவர்களால் பதில் கூறமுடியவில்லை.
மேலும் அந்த பையில் பிளேடால் கிழிக்கப்பட்ட ஓட்டை மிகச்சிறியதாகவும், அதன் வழியே எடுக்கப்பட்ட நகைப்பெட்டி மிகப்பெரியதாக இருந்ததும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதனால் போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் எழுந்தது. எனவே போலீசார் அவர்களை தனித்தனியே விசாரித்தனர். அப்போது வினோத் குமார் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனது கொழுந்தியார் வீட்டில் நகைகளை மறைத்து வைத்திருப்பதாக ராகவேந்தர் கூறினார். அதன்பேரில் போலீசார் இருவரையும் கைது செய்தனர். திருட்டு போனதாக கூறப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டது.
Average Rating