பாகிஸ்தானில் கைதான மொடல் அழகி!!
பாகிஸ்தான் நாட்டு மொடல் அழகியான அயான் அலி இஸ்லாமாபாத் விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
21 வயதான அயான் அலி கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதியே கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல மொடல் அழகியான அவர் எடுத்துச் சென்ற பயணப் பையில் 5 இலட்சம் அமெரிக்க டொலர் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்தே இக் கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்நாட்டு விதிகளின் படி 10,000 அமெரிக்க டொலர்களுக்கு அதிக பணத்தினை வேறுநாட்டுக்கு அனுமதியின்றி எடுத்துச் செல்ல முடியாது.
எனினும் அவர் பணத்தினை கடத்திச் செல்ல முயலவில்லையெனவும் அது நியாயமான முறையில் சொத்தொன்றை விற்று பெறப்பட்டது எனவும் அயான் அலியின் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
அயான் அலி தற்போது ராவல்பிண்டியில் அமைந்துள்ள ‘அடியாலா’ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சிறையில் உள்ள அயான் அலிக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் சில குற்றஞ்சாட்டியிருந்தன. அவரது அறையில் தொலைக்காட்சிப்பெட்டி, குளிர்ச்சாதன பெட்டி போன்றவை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது
எனினும் இக் குற்றச்சாட்டை சிறைச்சாலை நிர்வாகம் மறுத்துள்ளது. மேலும் சாதாரண கைதிகளுடனேயே அயான் அலி தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அவர் தங்கியிருக்கும் சிறை அறையில் வேறு பெண் கைதிகள் 10 பேரும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களைப் போலவே இவரும் நட த்தப்படுவதாக சிறை நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதுதவிர அவருக்கு தனது உறவினர்களை பார்வையிட கிழமைக்கு 2 தடவை மட்டுமே வாய்ப்பளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating