ஒரு காலத்தில் கைதியாக இருந்தவரின் மென்பொருள் கண்டுபிடிப்பு: அரியானா மாநில சிறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது!!
அரியானா மாநில சிறையில் கைதியாக இருந்தவரின் மென்பொருள் கண்டுபிடிப்பு, அரியானா மாநிலத்தின் சிறை பணிகளை நவீனமாக்க பயன்பட்டு இருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் குர்கானை பூர்வீகமாக கொண்ட மென்பொறியாளர் அமித் மிஸ்ரா. வரதட்சணை பிரச்சனை காரணமாக அவர் மனைவி தற்கொலைக்கு முயற்சித்ததை அடுத்து மிஸ்ரா சிறையில் அடைக்கப்பட்டார். கைதியாக அரியானாவின் போன்தேசி சிறையில் 13 மாதங்கள் இருந்த மிஸ்ராவுக்கு, சிறை கண்காணிப்பாளர் தூண்டுதலால் புதிய மென்பொருளை உருவாக்கும் எண்ணம் தோன்றியது.
அதன் விளைவாக மிஸ்ரா உருவாக்கியது தான் பீனிக்ஸ் என்ற மென்பொருள். இந்த மென்பொருள் மூலம், பயோமெட்ரிக் முறைப்படி கைதிகளின் கைரேகையில் ஆரம்பித்து அவர் செய்த குற்றம், சிறையில் அவரின் நடத்தை, எத்தனை முறை மருத்துவமனைக்கு சென்று உள்ளார் என்பது வரை அனைத்து தகவல்களும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட கைதியை பற்றிய தகவல்களை எப்போது வேண்டுமானாலும் எடுத்து பார்க்க முடியும். சிறை உணவகத்திலும் பழைய டோக்கன் முறையும் மாற்றப்பட்டு அனைத்தும் கணினி மயமாக மாற்றப்பட்டுள்ளது.
இது பற்றி மிஸ்ரா கூறும் போது, முதல் மூன்று மாதங்கள் கடுமையான மன அழுத்தத்துடன் இருந்தேன், சிறை கண்காணிப்பாளர் தூண்டுதலால் என்னுடைய திறமையை பயன்படுத்தி சிறையின் செயல்பாடுகளை மேம்படுத்த முடிவு செய்து உருவாகியது தான் பீனிக்ஸ் மென்பொருள். தற்போது 10 முன்னாள் கைதிகள் என்னுடன் சேர்ந்து இத்திட்டத்தில் வேலை பார்க்கிறார்கள். சிறையில் இருந்தவர்கள் என்பதால் மற்றவர்களை விட இவர்கள் மிகவும் உதவியாக உள்ளார்கள், என தெரிவித்து உள்ளார்.
தற்போது மிஸ்ரா அரியானாவின் மற்ற சிறைகளையும் நவீனமயமாக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறார். ஒரு காலத்தில் சிறையில் கைதியாக இருந்த மிஸ்ரா, இப்போது அதே சிறையில் ஹீரோவாக கொண்டாடப்படுகிறார்.
Average Rating