சென்னை ஐகோர்ட்டு வக்கீல் கொலை: கைதான 7 பேர் சிறையில் அடைப்பு!!
கும்பகோணம் அருகே உள்ள மேலமருத்துவக்குடியை சேர்ந்தவர் ம.க. ராஜா (34). சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார்.
விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தேப்பெருமாநல்லூரில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு காரில் சென்றார்.
பின்னர் வீடு திரும்பி கொண்டிருந்தார். கோவில் சன்னாபுரம் ரெயில்வே கேட் அருகே வந்த போது அவரை வழி மறித்த முகமூடி அணிந்த கும்பல் சரமாரி வெட்டியது. இதில் அவர் சம்பவ இடத்திலே இறந்தார்.
கொலையாளிகளை பிடிக்க திருவிடைமருதூர் டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கொலையாளிகளை தேடி வந்தனர்
இந்த நிலையில் திருவிடைமருதூர் அருகே கீழ தூண்டில் விநாயகம் பேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கோபி (24) உடையாளூர் அண்ணா நகர் ராமராஜன் (27), திருமங்கலக்குடி பாபு என்கிற ரத்தின வேல் பாண்டியன், ராமசாமி, அந்து மணி, நரசிங்கன் பேட்டை மூவேந்திரன், திருவிடைமருதூர் கீழ வீதி பிரகாஷ் (28) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் 4 பேர் திருச்சி மத்திய சிறையிலும், 3 பேர் கடலூர் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
Average Rating