தாம்பரம் விமானிகள் பயிற்சி மையத்தில் மகனுக்கு பயிற்சி அளித்த விமானப்படை தலைமை அதிகாரி!!
தாம்பரம் விமானிகள் பயிற்சி மையத்தில் மகனுக்கு விமானப்படை தலைமை அதிகாரி பயிற்சி அளித்தார். இருவரும் ஒரு மணி நேரம் ஹெலிகாப்டரில் பறந்தனர்.
சென்னை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் போர் விமானிகள் பயிற்சி மையம் உள்ளது. இந்த பயிற்சி மையத்தில் படை வீரர்களுக்கு போர் விமானங்களை தொழில்நுட்பத்துடன் இயக்குவது குறித்து பயிற்சியாளர்களால் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
விமானப்படை தென் பிராந்திய தலைமை அதிகாரியான அருண் புருஷோத்தம் கருட் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக தாம்பரத்தில் உள்ள விமானப்படை நிலையத்துக்கு வந்தார். அங்குள்ள விமானிகள் பயிற்சி மையத்தில் அருண் புருஷோத்தமின் மகனும், கப்பல் படை அதிகாரியுமான அபிஜித் பயிற்சி பெற்று வருகிறார்.
தென் பிராந்திய தலைமை அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு முன்பாக அருண் புருஷோத்தம் போர் விமான பயிற்சியாளராக பணியாற்றியவர். மேலும் 6,300 மணி நேரம் ஹெலிகாப்டர் மற்றும் போர் விமானங்களில் பயணம் செய்த அனுபவத்தை பெற்றவர்.
இந்தநிலையில் பயிற்சியாளர் என்ற முறையில் விமானப்படைக்கு சொந்தமான ‘சேத்தக்’ ஹெலிகாப்டரில் அருண் புருஷோத்தம் தனது மகன் அபிஜித்தை ஏற்றிக்கொண்டு போர் விமானத்தை இயக்குவது குறித்து அனுபவ ரீதியாக தான் கற்றறிந்த தொழில்நுட்பங்களையும், அறிவுரைகளையும் வழங்கினார்.
சுமார் ஒரு மணி நேரம் தந்தையும், மகனும் ஹெலிகாப்டரில் வானில் பறந்தனர். போர் விமானிகள் பயிற்சி மையத்தில் தந்தையும், மகனும் ஒரே ஹெலிகாப்டரில் வானில் பறந்தது இதுவரை நடைபெறாத ஒரு அரிய நிகழ்வாக கருதப்படுகிறது.
பின்னர் தாம்பரம் விமானப்படை நிலையத்தில் உள்ள 4 தொடர்பு இயக்க மையங்களையும் அவர் பார்வையிட்டார். விமானப்படை தொடர்பான தகவல்களை தெரிவிக்கும் வகையில் சென்னை விமான நிலையத்தில் உதவி மையம் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் குறித்தும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6 மாவட்டங்களில் உள்ள விமானப்படை நிலையங்களில் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
விமானப்படையில் 39 ஆண்டுகள் பணியாற்றிய அருண் புருஷோத்தம் அடுத்த மாதம் 31-ந்தேதியோடு விமானப்படையில் இருந்து ஓய்வுப் பெற உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
மேற்கண்ட தகவல் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Average Rating