இணைய சமத்துவ கொள்கை இந்தியாவில் நடைமுறைக்கு வருமா? – மத்திய அரசு குழு தீவிர ஆலோசனை!!
இணைய வசதிகளை அணுகும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும், இணையவழியாக பயணிக்கும் தகவல்கள் எந்த குறுக்கீடும் இல்லாமல் அனைவரையும் சென்றடையவேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் இணைய சமத்துவம்.
இவ்வாறு பயணிக்கும் தகவல்களை இணைய சேவை நிறுவனங்கள் தங்களது அதிகாரத்தைக் கொண்டு நிறுத்தவோ, அதன் வேகத்தைக் கூட்டவோ, குறைக்கவோ கூடாது. நாடு, இடம் சார்ந்து ஒரு சில தகவல்களை மக்கள் பயன்படுத்த கூடுதல் கட்டணம் வசூலிப்பதோ கூடாது என்பது இந்த இணைய சமத்துவத்தின் சாராம்சமாகும்.
நாடு முழுவதும் இந்த இணைய சமத்துவம் பற்றிய விவாதங்கள் தற்போது மேலோங்கிவரும் நிலையில், இதுபற்றி ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது.
இதுபற்றி மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத் இன்று கருத்து தெரிவிக்கையில், “இணைய சமத்துவ பிரச்சினை தொடர்பாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) பரந்த அளவில் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் இறுதி அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.
மேலும், தொலைத்தொடர்புத்துறை மூத்த அதிகாரிகள் தலைமையில் ஒரு குழுவை ஜனவரி மாதம் அமைத்தேன். இணைய சமத்துவத்தின் முழு வரம்பு, அதன் பயன்கள், ஒழுங்குமுறை மற்றும் தொழில்நுட்ப பிரச்சினைகள் உள்ளிட்ட குறைபாடுகள் குறித்து மே மாதம் இரண்டாவது வாரத்திற்குள் அறிக்கை அளிக்கும்படி அந்த குழுவிடம் கேட்டுக்கொண்டுள்ளேன்” என்றார்.
இணைய சமத்துவத்தை வலியுறுத்தி சேவ் தி இன்டர்நெட்.இன் என்ற இணையதளம் மூலமாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இ-மெயில் தகவல்கள் டிராய்க்கு அனுப்பப்பட்டுள்ளன. அமெரிக்கா, சிலி, நெதர்லாந்து, பிரேசில் போன்ற நாடுகள் ஏற்கனவே இணைய சமத்துவத்தை ஏற்றுக்கொண்டுள்ளன என்பது, குறிப்பிடத்தக்கது.
Average Rating