ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்டவர் கொலை!!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு ராக்காச்சியம்மன் கோவில் பகுதியில் மலையடிவாரத்தில் அருவி உள்ளது. இதில் குளிப்பதற்காக ராஜபாளையம் மேலஆவாரம் பட்டியை சேர்ந்த ஆனந்த ராஜ் (வயது27) தனது மனைவி கிருஷ்ணவேணி மற்றும் சகோதரர் அய்யப்பன், உறவினர் தர்மதுரை ஆகியோருடன் வந்திருந்தார்.
அருவில் ஆனந்தராஜ், அய்யப்பன், தர்மதுரை ஆகியோர் குளித்துக்கொண்டு இருந்தனர். கிருஷ்ணவேணி துணி துவைத்துக்கொண்டு இருந்தார். அப்போது கோவில்பட்டியை சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அவர்கள் கிருஷ்ணவேணியை கேலி செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்தராஜ் தரப்பினர் அந்த கும்பலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
இதில் அந்த கும்பல் ஆனந்தராஜை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். தடுக்க வந்த அய்யப்பன், தர்மதுரைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த 3 பேரும் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்தராஜ் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. முரளி தரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த கொலை தொடர்பாக மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆனந்த ராஜ் கொலை செய்யப்பட்ட தகவலை அறிந்து அவர்களது உறவினர்கள் மற்றும் மேல ஆவாரம்பட்டி கிராம மக்கள் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். அங்கு அவர்களை உடலை வாங்க மறுத்து திடீரென ராஜபாளையம்–தென்காசி ரோட்டில் சாலை மறியல் செய்தனர். அப்போது அவர்கள் கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
டி.எஸ்.பி. (பொறுப்பு) ராஜா அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உறுதி கூறியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. ஆனாலும் உறவினர்கள் ஆனந்தராஜின் உடலை வாங்காமல் ஆஸ்பத்திரி முன்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கொலையான ஆனந்த ராஜ் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளன.
Average Rating