4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: கைதான தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தாகம் தீர்த்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் ஊர் ஊராக சென்று பேப்பர் பொறுக்கி விற்பனை செய்தார். இவர் தனது மனைவி மற்றும் 4 வயது மகள் மலர்க்கொடி ஆகியோருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அயோத்தியாப்பட்டணம் ரெயில் நிலையத்தில் தங்கி இருந்தார்.
சம்வத்தன்று இரவு இவரது மகள் மலர்க்கொடி திடீரென்று மாயமானார். மறுநாள் காலை பார்த்த போது அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும், கொலை செய்யப்பட்டும் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அயோத்தியாபட்டணத்தை அடுத்த விளாம்பட்டி கிராமத்தை சேர்ந்த முனியப்பன் (49) என்ற கூலி தொழிலாளியை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
விசாரணையில் அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று விட்டு பிணத்தை கிணற்றில் வீசியது தெரிய வந்தது.
தற்போது அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்து உள்ளது. இதன்படி அவர் ஓராண்டு காலத்திற்கு சிறையில் இருப்பார். சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுப்புலட்சுமி வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முக சுந்தரம், காரிப்பட்டி இன்ஸ்பெக்டர் கந்தவேல் ஆகியோர் பரிந்துரையின் பேரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற கூலி தொழிலாளியை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் உத்தரவில் சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் கையெழுத்திட்டார்.
இந்த உத்தரவு நகல் சேலம் மத்திய சிறையில் உள்ள முனியப்பனிடம் நேற்று வழங்கப்பட்டது.
Average Rating