அசாமில் கார் திருட்டு வழக்கில் பெண் எம்.எல்.ஏ. கைது!!
அசாம் மாநிலம் கவுகாத்தியில் கார் திருட்டு கும்பல் செயல்பட்டு வந்தது. இவர்கள் அசாமில் கார்கள் மற்றும் ஆட்டோக்களை திருடி அவற்றை வேறுவடியில் மாற்றி புதுகார் ஆட்டோக்கள் போல் மும்பை, டெல்லி போன்ற பெரு நகரங்களில் விற்று வந்தனர்.
இந்த திருட்டு கும்பல் தலைவனாக அனில் சவுகான் செயல்பட்டு வந்தான். இவனுக்கு மும்பை, டெல்லியில் உள்ள கார் திருட்டு கும்பல்களுடன் தொடர்பு இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவனை தேடப்படும் குற்றவாளியாக போலீஸ் அறிவித்தது.
கடந்த 2010–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனில் சவுகான் மேகாலயா மாநிலத்தில் பதுங்கி இருந்த போது அம்மாநில போலீசில் சிக்கினான். அவன் நாடு முழுவதும் 3000 கார்கள் திருடி விற்றதாக தெரிவித்தான்.
இதற்கிடையே கவுகாத்தியில் நடந்த கார் திருட்டு வழக்குகள் தொடர்பாக அசாம் போலீசார் அவனை கைது செய்து விசாரித்தனர்.
இவன் கவுகாத்தி சட்டசபை வளாகத்திலும் கார் பாஸ் பெற்று சட்டசபை வளாகத்துக்குள் காரில் வந்து சென்று இருக்கிறான். போலீஸ் விசாரணையில் பெண் எம்.எல்.ஏ. ரூமி நாத் அவருக்கு கார் பாஸ் பெற்றுக் கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து எம்.எல்.ஏ. ரூமி நாத்தை போலீசார் இன்று அதிகாலை கவுகாத்தியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர். கார் கடத்தல் கும்பலுடன் தொடர்பு கொண்டு கார் கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கைதான எம்.எல்.ஏ. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் அவரிடம் விளக்கம் கேட்டு சட்சி தலைமை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ரூமி நாத் எம்.எல்.ஏ. முதலில் பா.ஜனதா கட்சியில் இருந்தார். 2010–ம் ஆண்டு காங்கிரசில் சேர்ந்தார். 2011–ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
ரூமி நாத் எம்.எல்.ஏ. சில ஆண்டுகளுக்கு முன் தனது டாக்டர் கணவர் ராஜேஷ் சிங்கை பிரிந்தார். 2வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். அதன் பிறகு முஸ்லீம் மதத்துக்கு மாறி எம்.எல்.ஏ. ஜாக்கி ஜாகீரை மறுமணம் செய்தார்.
கடந்த ஆண்டு ஜாகீர் மீதும் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் ஜாகீர் கைது செய்யப்பட்டார். இதனால் ரூமிநாத் எம்.எல்.ஏ.அசாமில் சர்ச்சைக்குரியவராக பேசப்பட்டார். தற்போது கார் திருட்டு வழக்கில் சிக்கி உள்ளார்.
Average Rating