விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்துங்கள்:-JVP
சிங்கள தீவிரவாத கட்சியான ஜனதா விருக்தி பெரமுனாவின்(JVP) சிறப்பு மாநாடு கொழும்பு நகரில் நடந்தது. இதில் அந்த கட்சி தலைவர் சோமவன்ச அமரசிங்கா பேசும்போது கூறியதாவது:- நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மிக மோசமாக இருக்கிறது. பயங்கர வாதத்தை நாம் தோற்கடிக்க வேண்டும். பயங்கரவாதம் எது என்பதை அதிபர் ராஜ பக்சே தெளிவாக தெரிந்து கொள்ளவேண்டும். நாம் இப்போது தற்காப்பு நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டு வருகிறோம். இதன் மூலம் பயங்கர வாதத்தை வெற்றி கொள்ள முடியாது.
யுத்தத்தின் மூலம்தான் நாம் நம்மை தற்காத்து கொள்ள முடியும். விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு இதுதான் சரியான நேரம். எனவே அரசு இப்போது தாக்குதல் நடத்துவதற்கு தயாராக வேண்டும். இந்த நாட்டின் தலைவர் என்கிற முறையில் மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அதிபருக்கு உண்டு.
அனைத்து சர்வதேச, உள்நாட்டு சக்திகளும் தனி ஈழத்தை அமைக்க விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக உள்ளன. இலங்கையை ஒரு தோல்வி அடைந்த நாடு என்று அமெரிக்காவில் அரசு சார்பற்ற நிறுவனம் கூறி இருக்கிறது. அதிபர் ராஜபக்சேயை நாங்கள் பாதுகாப்போம். அவருக்கு ஏதேனும் நிகழ்ந்தால் ஒரு ஆட்சியாளர் இல்லாத தோல்வி அடைந்த நாடாகத்தான் இலங்கை உருவாகும்.
இலங்கையில் இன்னும் விடுதலைப்புலிகளை தடை செய்யாமல் இருப்பது முட்டாள்தனம். விடுதலைப்புலிகளிடம் இருந்து ஆயுதங்களைகளையும் வரை அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு போகக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.