நாசரேத் அருகே சிறுவன் கொலை: கைதான 14 வயது சிறுமி சீர்திருத்த பள்ளியில் அடைப்பு!!
நாசரேத் அருகே உள்ள தேரிப்பனை கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன், தொழிலாளி. இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு அபிஷேக் (வயது 3½) உள்பட 3 மகன்கள் உள்ளனர்.
கடந்த 28–ந்தேதி வீட்டின் முன்பு அபிஷேக் விளையாடிக்கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் அவன் மாயமாகிவிட்டான். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடிபார்த்த போது அங்குள்ள கிணற்றில் அபிஷேக் பிணமாக மிதந்தான். இது குறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் விசாரணை நடத்தியதில், அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி அபிஷேக்கை கிணற்றில் வீசி கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் அந்த சிறுமியை கைது செய்தனர்.
அவள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தாள். அதன்விவரம் வருமாறு:–
நான் சரியாக படிக்காததால் பள்ளிக்கு செல்லவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு அபிஷேக்கின் பாட்டி எனது பெற்றோரிடம் சென்று வீடுகளில் திருடுவதாக என் மீது புகார் கூறினார். இதற்காக பாட்டியை பழிவாங்கும் நோக்கில் அவரது பேரன் அபிஷேக்கை கிணற்றில் தூக்கி வீசி கொலை செய்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.
கைதான சிறுமியை தூத்துக்குடி இளம்சிறார் நீதிமன்ற குழுமம் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் தூத்துக்குடியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அந்த சிறுமியை அடைத்தனர்.
Average Rating