3-வது இடத்தையாவது ஜெர்மனி பிடிக்குமா? போர்ச்சுக்கல்லுடன் நாளை மோதல்
18-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. 32 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் பிரான்சு, இத்தாலி அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. ஜாம்பவான் அணிகளான பிரேசில், அர்ஜென்டினா கால் இறுதியிலேயே தோற்று வெளியேறின. ஜெர்மனி அரை இறுதியில் இத்தாலியிடம் தோல்வி கண்டது. அதேபோல் மற்றொரு அரை இறுதியில் போர்ச்சுக்கல் பிரான்சிடம் தோற்றது. இந்த இரு அணிகளும் நாளை நடைபெறும் 3-வது இடத்துக் கான ஆட்டத்தில் மோதுகின்றன.
ஜெர்மனி போட்டியை நடத்துவதால் சாம்பியன் பட்டம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக அந்த அணி 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் மோத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
17 உலக கோப்பைகளில் ஆடியுள்ள ஜெர்மனி 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 1934-ம் ஆண்டு 3-வது இடத்தை பிடித்தது. 1966-ம் ஆண்டு இறுதி போட்டியில் தோல்வி அடைந்தது.
பல்லாக், ரிபரி, குளூஸ் போன்ற முன்னணி வீரர்கள் இம்முறை இருந்தும் இறுதிபோட்டிக்கு அந்த அணி தகுதி பெற முடியாமல் போனது வேதனையாக அமைந்தது. குளூஸ் 5 கோல்கள் அடித்துள்ளார்.
நாளைய ஆட்டத்தில் அவர் மேலும் ஒரு கோல் அடிக்கும் பட்சத்தில் அதிக கோல்கள் அடித்த வீரர் பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பார். மேலும் தங்கஷூவும் அவருக்கு கிடைப்பது உறுதியாகும்.
40 ஆண்டுகளுக்கு பிறகு அரை இறுதிக்கு முன்னேறிய போர்ச்சுக்கல் அணி எப்படியாவது முதல் முறையாக இறுதி போட்டியில் நுழைந்துவிட வேண்டும் என துடித்தது.
ஆனால் அதிர்ஷ்டம் பிரான்சு பக்கம் இருந்ததால் அந்த அணியிடம் அரை இறுதியில் தோல்வி கண்டது. எனினும் 3-வது இடத்தை பிடிக்க நாளைய ஆட்டத்தில் ஜெர்மனியுடன் போராடும். போர்ச்சுக்கல் அணியின் பலமே நடுகளமும், முன்களமும்தான்.
அந்த அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிகோ, டிகோ, மனிச் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர். பிரான்சுக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் போர்ச்சுக்கல் வீரர்களின் தாக்குதல் சிறப்பாக இருந்தது. இதனால் ஜெர்மனி அணிக்கு போர்ச்சுக்கல் கடும் நெருக்கடி கொடுக்கும் எனத் தெரிகிறது.