மதுரையில் தொழில் அதிபர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை!!
மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார் (வயது44). இவர் கொடைரோட்டில் மருந்து கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மதுரையில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கொடைரோட்டில் இருந்து சந்திரகுமார் வீட்டுக்கு வந்து செல்வார்.
தற்போது பள்ளிக்கூட விடுமுறை என்பதால் மனைவியை கடந்த 9–ந்தேதி வீட்டை பூட்டி விட்டு கொடைரோட்டுக்கு அழைத்து சென்றார். பின்னர் நேற்று மாலை சந்திரகுமாரின் மனைவி மட்டும் மதுரை திரும்பினார். வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீடு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கணவர் சந்திரகுமாருக்கு தகவல் கொடுத்தார். அவர் உடனடியாக மதுரைக்கு வந்தார். வீட்டில் உள்ள பீரோவை உடைத்து அதில் இருந்த 30 பவுன் நகை, வெள்ளி கொலுசு, ரூ. 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து சந்திரகுமார் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
மதுரையில் சில வாரங்களாக கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனர். தற்போது விடுமுறை நாட்களாக இருப்பதால் பலர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் மற்றும் சுற்றுலா சென்று விடுகிறார்கள். இதை பயன்படுத்தி பூட்டி இருக்கும் வீடுகளை குறிவைத்து கொள்ளையர்கள் கைவரிசையை காட்டி வருகிறார்கள்.
வீட்டை பூட்டி விட்டு செல்பவர்கள் அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்து சென்றால் வீடு கண்காணிக்கப்படும் என போலீஸ் கமிஷனர் தெரிவித்திருந்தும் அதை பின்பற்றுவதில்லை. இதனால் இப்படிப்பட்ட சம்பவங்கள் அதிகரித்து வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் அருகில் வசிப்பவர்களிடமும் வீட்டை பார்த்து கொள்ளும்படி கூறி சென்றால் இதுபோன்ற சம்பவம் குறைய வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.
Average Rating