ஓட்டுநர் உரிமம் பெற அரசு அலுவலருக்கு லஞ்சம் தந்த அரவிந்த் கெஜ்ரிவால் மகள்: சுவாரஸ்ய தகவல்!!
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஓட்டுநர் உரிமம் பெற அரசு அலுவலருக்கு லஞ்சம் தர முன்வந்த சுவாரஸ்ய தகவலை அவரது தந்தை வெளியிட்டுள்ளார்.
டெல்லியின் புறநகர் பகுதியான புராரி அருகே இன்று ஆட்டோ ரிக்ஷா டிரைவர்கள் மத்தியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி அமைந்த பின்னர் லஞ்சம் முற்றிலுமாக ஒழிந்து விட்டது என நான் கூற விரும்பவில்லை. எனினும், அரசு துறைகளில் 70 முதல் 80 சதவீதம் வரை லஞ்சம் குறைந்துள்ளது என குறிப்பிட்டு ஒரு சம்பவத்தையும் உதாரணமாக தெரிவித்தார்.
டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்காக எனது மகள் ஹர்ஷிதா சமீபத்தில் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு சென்றார். பழகுநர் உரிமம் (எல்.எல்.ஆர்.) பெறுவதற்காக காத்திருந்தவர்களுடன் அவரும் வரிசையில் நின்றார். டெல்லி முதல்வர் என்ற வகையில் நான் நினைத்திருந்தால் அதிகாரிகளை வீட்டுக்கே வரவழைத்து லைசென்சுக்கு ஏற்பாடு செய்திருக்க முடியும்.
ஆனால், அரசு அலுவலகங்கள் இப்போது எப்படி செயல்படுகின்றன? என்பதை அறிந்து கொள்வதற்காக எனது மகள் தனியாக ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பித்தார். விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஒரு ஆவணத்தை கொண்டு வரவில்லை என கூறிய அவர், எனக்கு அவசரமாக லைசென்ஸ் தேவை என அலுவலரிடம் வலியுறுத்தினார்.
எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன். எனக்கு சீக்கிரமாக லைசென்ஸ் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறி அந்த அலுவலருக்கு பணம் கொடுக்க முயன்றார். அவரது கையில் ரகசிய கேமரா ஏதேனும் உள்ளதா? என பயந்த அந்த அதிகாரி, பணத்தை வாங்க மறுத்ததுடன் உரிய ஆவணத்துடன் வந்தால் மட்டுமே பழகுநர் உரிமம் வழங்கப்படும் என்று கறாராக கூறி விட்டார்.
சற்று நேரத்தில் தனது கைப்பையில் மறைத்து வைத்திருந்த அந்த ஆவணத்தை எனது மகள் அந்த அதிகாரியிடம் நீட்ட, அதில் அவரது பெயரும் தந்தையின் பெயர் என்ற இடத்தில் எனது பெயரும் இருந்ததை கண்டு திகைத்துப்போன அவர், ‘நீங்கள் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் மகளா?’ என்று அதிர்ச்சியுடன் கேட்டார். அவரும் ‘ஆம்’ என்று கூற, அந்த அலுவலகத்தில் உள்ள அனைவரும் பம்பரமாக சுழன்று என் மகளுக்கு பழகுநர் உரிமம் கிடைக்க உடனடியாக ஏற்பாடு செய்து தந்தனர்.
இன்று டெல்லியில் உள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழல் அதிகாரிகள் லஞ்சம் வாங்க பயப்படுகின்றனர். நேர்மையான அதிகாரிகள் தங்களது கடமைகளை தைரியமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.
Average Rating