நடுரோட்டில் பெண்ணை செங்கல்லால் தாக்கிய போலீஸ் அதிகாரி பெயிலில் விடுதலை!!
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, நடுரோட்டில் பெண் ஒருவர் செங்கல்லால் தாக்கப்பட்ட வழக்கில் பெண்ணை தாக்கிய காவலர் பெயிலில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே 11-ம் தேதி இருசக்கர வாகனத்தில் தனது பையனை பள்ளியிலிருந்து அழைத்து வந்துகொண்டிருந்த பெண்ணை சாலையில் வழிமறித்த தலைமை கான்ஸ்டபிளான சதீஷ் சந்த், சாலை விதிமுறையை மீறியதாகக் கூறி அவரிடம் லைசன்ஸ் மற்றும் முக்கிய ஆவணங்களைக் காட்டச் சொல்லி, 200 ரூபாய் அபராதம் கேட்டார். அபராதம் கொடுப்பதற்கான ரசீது வேண்டும் என அந்தப் பெண் வலியுறுத்த, ரசீது கொடுக்க சதீஷ் மறுக்க, இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் சந்த் அந்தப் பெண் மீது செங்கல்லை எறிந்து தாக்கினார். காயமடைந்த அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நடந்த சம்பவத்தை அந்த வழியே சென்றுகொண்டிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுக்க, அது ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, பெண்ணைத் தாக்கிய காவலர் சதீஷ் மே 11-ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அடுத்த நாள் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில், சதீஷின் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷை பெயிலில் விடுவிப்பதாக தீர்ப்பளித்தார். இது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating