மத பிரச்சினையால் பெற்றோர் எதிர்ப்பு: தலைமறைவாக சுற்றித்திரிந்த காதல் ஜோடியை பிடித்த உறவினர்கள்!!
உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள சோன்ங் நகரைச் சேர்ந்த இளம் காதல் ஜோடி பெற்றோருக்கு தெரியாமல் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோரிடம் சொல்லிக் கொள்ள வில்லை.
இந்த நிலையில் பெற்றோருக்கு தெரிய வந்ததும் அவர்கள் கண்டித்தனர். இருவரும் பேசக்கூடாது, சந்திக்க கூடாது என்று தடை போட்டனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 30–ந்தேதி இருவரும் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் காதலர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஊரை விட்டு வெளியேறிய காதல் ஜோடிமுதலில் அரியானா மாநிலம் பல்வால் கிராமம் சென்று 2 நாள் தங்கினர். பின்னர் அங்கிருந்து ரெயிலில் டெல்லி வந்தனர். அங்கு சில நாட்களை ஜாலியாக கழித்த பின்பு ரெயில் ஏறி சென்னைக்கு வந்தனர். இங்கு ஒரு இடத்தில் 2 நாட்கள் தங்கி இருந்தனர். இதை எப்படியோ தெரிந்து கொண்ட உறவினர்கள் காதலர்களை தேடி சென்னை வந்தனர்.
அதற்குள் காதல் ஜோடி கொல்கத்தாவுக்கு தப்பி விட்டது. இப்படியாக உ.பி., அரியானா, டெல்லி, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் சுற்றித்திரிந்தனர். கடைசியாக கொல்கத்தாவில் உறவினர்கள் அவர்களை கண்டு பிடித்துவிட்டனர்.
உடனே போலீஸ் உதவியுடன் மதுரா அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு உள்ளூர் போலீசார் காதலனை கைது செய்தனர். இளம் பெண்ணை கடத்தியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இளம்பெண் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
முன்னதாக இளம்பெண் மாஜிஸ்திரேட்டிடம் அளித்த வாக்குமூலத்தில் தனக்கு 20 வயதாகிறது. தனது விருப்பப்படி தான் காதலனுடன் சென்றேன் என்று கூறினாள். இந்த பிரச்சினையால் உள்ளூரில் இரு பிரிவினரிடையே பதட்டம் நிலவுகிறது. போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
Average Rating