வண்ணாரப்பேட்டையில் நள்ளிரவில் ஒரு வயது ஆண் குழந்தையை ரோட்டில் வீசி சென்ற போதை தம்பதி!!
பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலை சிக்னல் அருகே நேற்று இரவு 11 மணி அளவில் கணவனும், மனைவியும் ஒருவயது ஆண் குழந்தையுடன் நடந்து சென்றனர்.
திடீரென அவர்கள் சாலை ஓரத்தில் குழந்தையை வீசி விட்டு ஒன்றும் தெரியாததுபோல் நடந்து சென்றனர். சிறிது நேரத்தில் வலியால் குழந்தை பயங்கரமாக அலறியது. ஆனாலும் அந்த குழந்தையை கண்டு கொள்ளாமல் நடந்து சென்றனர்.
இதனை கவனித்த அவ்வழியே சென்றவர்கள் குழந்தையை மீட்டு தம்பதியை விரட்டி பிடித்தனர். அப்போது கணவன்– மனைவி இருவரும் மது போதையில் இருப்பது தெரிந்தது.
இதையடுத்து அவர்களை வண்ணாரப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் ராயப்பன் விசாரணை செய்தபோது அவர்கள் பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையில் பிளாட்பாரத்தில் வசித்து வரும் ராஜேந்திரன், அவரது மனைவி கங்காதேவி என்பது தெரிந்தது. குழந்தையின் பெயரை அவர்களுக்கு சரிவர தெரியவில்லை.
போதை மயக்கத்தில் இருந்த அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடத்த முடியாததால் போலீசார் திணறினர். இதையொட்டி இன்று விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர். குழந்தையை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தை நலமாக உள்ளது.
வீசப்பட்டது போதை தம்பதியின் குழந்தைதானா? அல்லது வேறு எங்கேனும் குழந்தையை திருடி வந்தார்களா? என்பது விசாரணைக்கு பின்னரே தெரிய வரும்.
Average Rating