கடலூர் அருகே ஜீப் மீது வாகனம் மோதல்: டிராபிக் ராமசாமியின் பெண் உதவியாளர் படுகாயம்!!
சென்னையை சேர்ந்த சமூக சேவகர் டிராபிக் ராமசாமி. இவர் சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இதற்காக இவர் அனைத்து கட்சியின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்.
டிராபிக் ராமசாமி மக்கள் பாதுகாப்பு கழகம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதன் செயலாளராக இருப்பவர் பாத்திமா (வயது 40). இவர் டிராபிக் ராமசாமியின் உதவியாளராகவும் இருந்து வருகிறார். பாத்திமா நேற்று கும்பகோணத்திற்கு சென்றுவிட்டு சென்னைக்கு ஜீப்பில் வந்துகொண்டிருந்தார்.
கடலூர் அருகே உள்ள ஆலங்குப்பத்தில் ஜீப்பை நிறுத்திவிட்டு நின்றுக்கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ஜீப்பில் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பாத்திமா படுகாயம் அடைந்தார். அவரை கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் டிராபிக் ராமசாமி சென்னையிலிருந்து புதுவை வந்தார். அவர் பாத்திமாவை பார்த்து உடல்நலம் விசாரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
ஆர்.கே.நகர் தொகுதியில் பாத்திமாவைத்தான் வேட்பாளராக நிறுத்த முதலில் திட்டமிட்டிருந்தோம். அப்போதே அவருக்கு மிரட்டல் வந்தது. அதன் பிறகுதான் நான் போட்டியிடுவது என்று முடிவு எடுத்தேன்.
பாத்திமா வந்த ஜீப்பில் திட்டமிட்டு மோதியிருக்கிறார்கள். அந்த ஜீப்பில் நான் வருவதாக நினைத்து என்னை கொல்லும் நோக்கத்தில் வாகனத்தை விட்டு மோதி உள்ளனர். ஆனால் நான் அந்த ஜீப்பில் வரவில்லை. இதனால் உயிர் தப்பினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating