கன்னியாகுமரியில் கடலில் குளித்த பெண்களிடம் நீரில் மூழ்கி சில்மிஷம்: 3 வாலிபர்கள் சிக்கினர்!!
கன்னியாகுமரியில் சீசன் முடிந்த பின்பும், விடுமுறை நாட்களில் உள்ளூர் சுற்றுலா பயணிகள் பலர் மாலை நேரங்களில் குடும்பத்துடன் வருவது உண்டு.
அவர்கள் திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை கடற்கரையில் அலைகளில் கால்களை நனைத்தும், கடலில் குளித்தும் மகிழ்வார்கள். நேற்றும் கன்னியாகுமரியில் உள்ளூர் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
அப்போது ஏராளமான ஆண்களும், பெண்களும் குடும்பத்துடன் சேர்ந்து கடலில் குளித்தனர். இந்த காட்சிகளை கடற்கரை ஓரத்தில் சுற்றிக் கொண்டிருந்த சில வாலிபர்கள் நோட்டமிட்டப்படி இருந்தனர். சிறிது நேரத்தில் அந்த வாலிபர்களும், கடலில் குளிக்க தொடங்கினர்.
அப்போது ஏற்கனவே கடலில் நீராடி கொண்டிருந்த சில பெண்கள் அய்யோ… அம்மா… என்று அலறினர். அவர்களிடம் காரணம் கேட்டபோது, யாரோ சிலர் நீருக்குள் மூழ்கி வந்து தங்கள் கால்களை இழுத்ததோடு, சில்மிஷத்திலும் ஈடுபடுவதாக கூறினர்.
இதுபற்றி பெண்களுடன் வந்தவர்கள் கடற்கரையில் பாதுகாப்புக்கு நின்ற போலீசாரிடம் புகார் கூறினர். அவர்கள் கடலுக்குள் இறங்கி சில்மிஷத்தில் ஈடுபட்டவர்கள் யார்? என்பதை கண்காணித்தனர்.
இதில் 5 வாலிபர்கள் குடிபோதையில், கடலுக்குள் விளையாடிக்கொண்டிருந்ததை கண்டனர். அவர்களில் அதிக போதையுடன் இருந்த 3 பேரை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
அங்கு நடத்திய விசாரணையில் அவர்கள், கேரள மாநிலம் பாலராமபுரத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. குடிபோதையில் அவர்கள் செல்போனில் பெண்களின் படத்தை எடுத்ததோடு, சில்மிஷத்திலும் ஈடுபட்டது தெரிய வந்தது.
அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Average Rating