காஷ்மீரில் பிரிவினைவாதிகள் போராட்டத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். கொடி: போலீசைக் கண்டதும் முகமூடி ஆசாமிகள் ஓட்டம்!!
காஷ்மீரில் இன்று பிரிவினைவாதிகளின் போராட்டத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொடி ஏந்தி செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு- காஷ்மீரில் அண்மைக்காலமாக பிரிவினைவாதிகள் நடத்தி வரும் போராட்டத்தில் பாகிஸ்தான் கொடிகளை ஏந்தி செல்வது வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் கொடியுடன், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினரின் கொடியும் ஏந்தி செல்லப்பட்ட சம்பவம் அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காஷ்மீர் பிரிவினைவாத இயக்கங்களில் ஒன்றான தெக்ரீக்-இ-ஹூரியத் இயக்கத்தை சேர்ந்த அல்தாப் ஷேக் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் கடந்த 9-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த ஹூரியத் மாநாட்டுக்கட்சி தலைவர் சையத் அலி ஷா கிலானி அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி ஸ்ரீநகரில் நடந்த போராட்டத்தின்போது, அங்குள்ள ஜமியா மசூதியில் இருந்து நவ்கட்டா சவுக் வரை போராட்டக்காரர்கள் பேரணியாக சென்றனர். இந்த பேரணியில், தங்கள் முகத்தை மூடியவாறு வந்த 2 இளைஞர்கள், ஐ.எஸ். தீவிரவாதிகளின் கறுப்பு நிற கொடியை தங்கள் கைகளில் ஏந்தி சென்றனர். மேலும் சிலர் பாகிஸ்தான் நாட்டு கொடியையும் ஏந்தியிருந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் போலீசாரை பார்த்ததும் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். இதனால் யாரையும் கைது செய்ய முடியவில்லை. இதுபற்றி விசாரணை நடத்தி இதில் ஈடுபட்ட நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உறுதி அளித்துள்ளது.
மேலும் குப்வாரா மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடந்த போராட்டங்களிலும் பாகிஸ்தான் கொடியை சிலர் ஏந்தியிருந்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Average Rating