அண்ணன்–தங்கையை கொன்ற கொள்ளையர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை: கரூர் கோர்ட்டு தீர்ப்பு!!
கரூர் வடக்கு காந்திபுரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். எல்.ஐ.சி. அதிகாரியான இவர் மனைவி ஜெயந்தி ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு தீபிகா, ராம்பிரகாஷ் என்ற இரு குழந்தைகள் இருந்தனர்.
கடந்த 17.5.2007 அன்று கார்த்திகேயன், ஜெயந்தி இருவரும் வேலைக்கு சென்றிருந்தனர். குழந்தைகள் இருவரும் வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினர். அப்போது அவர்களது வீட்டை உடைத்து கொள்ளையர்கள் 3 பேர் கொள்ளையில் ஈடுபட்டிருந்தனர்.
அண்ணன்–தங்கை இருவரும் வீட்டிற்குள் சென்றதும் கொள்ளையர்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். இதனால் தாங்கள் மாட்டிக் கொள்வோம் என நினைத்த கொள்ளையர்கள் தீபிகா, ராம்பி ரகாஷ் இருவரது கழுத்தையும் அறுத்து கொலை செய்தனர். மேலும் வீட்டில் இருந்த வெள்ளி நாணயங்களை கொள்ளையடித்து சென்றனர்.
இந்த இரட்டை கொலை மற்றும் கொள்ளை குறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தான்தோன்றிமலை ராபரி முரளி (27), அகதிகள் முகாமை சேர்ந்த பாண்டி (எ) தங்கபாண்டி, குமார் (எ) விஜயகுமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இது குறித்த வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதி மன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குணசேகரன் இன்று தீர்ப்பு கூறினார். தீர்ப்பில் குழந்தைகள் இருவரையும் கொலை செய்த குற்றத்திற்காக 3 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம், கொள்ளையில் ஈடுபட்ட குற்றத்திற்காக 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இதைத் தொடர்ந்து கொள்ளையர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Average Rating