தீக்குளித்து கர்ப்பிணி பெண் – குழந்தை சாவு: மனைவியை சித்ரவதை செய்ததாக கணவர் கைது!!
எருக்கஞ்சேரி கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் வேணு கோபால் (30). தனியார் நிறுவன ஊழியர்.
இவரது மனைவி சுதா (25). வேணுகோபால் – சுதா திருமணம் 2013–ம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு கவுசிக் (2) என்ற ஆண் குழந்தை இருந்தது. சுதா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்த நிலையில் கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த சுதா நேற்று முன்தினம் தீக்குளித்தார். குழந்தை கவுசிக்கையும் கட்டிப்பிடித்தார்.
இதில் படுகாயம் அடைந்த சுதா, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது.
கை குழந்தை கவுசிக்குக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது என்றாலும் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை நேற்று மாலை பரிதாபமாக இறந்தது.
இதற்கிடையே சுதாவின் தந்தை மனோகரன் எம்.கே.பி. நகர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்திருந்தார். அதில், ‘எனது மகள் திருமணத்தின் போது 40 பவுன் நகை ஒரு மோட்டார் சைக்கிள், ரூ. 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்தேன்.
அதன்பிறகும் திருப்தி அடையாத சுதாவின் கணவர் வேணுகோபால், வீடு கட்டுவதற்கு பணம், வாங்கி வரும்படி என் மகளை சித்ரவதை செய்திருக்கிறார். வீட்டில் பூட்டி வைத்து உணவு கொடுக்காமல் கொடுமைபடுத்தி இருக்கிறார். இதற்கு அவருடைய தாயார் மற்றும் அக்காள், தங்கை ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்’ என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீசார் தீக்குளித்து இறந்த சுதாவின் கணவர் வேணுகோபாலை கைது செய்தனர். சுதாவின் மாமியார் சகுந்தலா, வேணுகோபாலின் அக்காள் தேவிகா, தங்கை கோமதி ஆகியோர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
3 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Average Rating