வாடிக்கையாளர்களின் நலன் காக்க போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபடும் பாலியல் தொழிலாளர்கள்!!
ஆசியாவின் மிகப்பெரிய சிவப்பு விளக்கு பகுதி என்று கருதப்படும் சோனாகாச்சியில் உள்ள பாலியல் தொழிலாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் போதை மருந்து பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர்.
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சோனாகாச்சி பகுதியில் பாலியல் தொழிலில் ஏராளமான பெண்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களை ஒருங்கிணைத்து அவர்களின் நல்வாழ்விற்காக தர்பார் என்ற அரசுசாரா தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது. சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பாலியல் தொழிலாளர்களுடன் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் சார்பில், சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இன்று பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதன் முக்கிய அம்சமாக, பாலியல் தொழிலாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை போதை மருந்து பழக்கத்தில் இருந்து விடுபட வைக்கும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர்.
இதுபற்றி அந்த அமைப்பின் அதிகாரியான பாரதி கூறுகையில், “பாலியல் தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடையே எச்ஐவி, எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இப்போது அவர்களின் போதைப் பழக்கத்தை மாற்றும் வகையிலான விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்க முடிவு செய்துள்ளோம்.
சோனாகாச்சியில் உள்ள பாலியல் தொழிலாளர்கள் அனைவரும் போதை மருந்து பழக்கம் கொண்டவர்கள் இல்லை. அவர்களில் ஒருசிலர் மட்டும் இந்த பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். ஆனால், இங்கு வரும் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் போதைமருந்து பயன்படுத்துகின்றனர். எனவே, இங்கு நடத்தப்படும் விழிப்புணர்வு பிரச்சாரமானது வாடிக்கையாளர்கள் போதைப் பழக்கத்தில் இருந்து விடுபட உதவும்” என்றார்.
Average Rating