குஜராத்தில் பெரு வெள்ளம்: கோயிலுக்குள் பதுங்கியிருந்த சிங்கம் தாக்கி இரு பெண்கள் படுகாயம்!!
குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகின்றது. பல மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் வயல் வெளிகள் வெள்ளநீர் சூழ்ந்து ஏரி போல காணப்படுகின்றது.
காட்டுப்பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் சில விலங்குகள் வெள்ளத்தில் நீந்தியபடி அருகாமையில் உள்ள கிராமப்புறங்களுக்கு வந்து சேர்ந்துள்ளன.
இந்நிலையில், இங்குள்ள அம்ரேலி மாவட்டத்தின் இங்ரோலா கிராமத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு நேற்று அப்பகுதியை சேர்ந்த இரு
பெண்கள் சாமி கும்பிடுவதற்காக சென்றனர். அருகாமையில் ஓடும் செட்ருஞ்சி ஆற்றில் கரை புரண்டு ஓடிய வெள்ளத்தில் நீந்திவந்த ஒரு பெண் சிங்கம் உள்ளே பதுங்கியிருப்பதை அறியாத அந்தப் பெண்கள் கோயிலுக்குள் நுழைந்தனர்.
அப்போது, பயங்கராமாக கர்ஜித்தபடி வெளியே ஓடிவந்த சிங்கம், அந்தப் பெண்களின் மீது ஆவேசமாக பாய்ந்து தாக்கியது. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த அந்த பெண்கள் உயிர் பயத்துடன் வேகமாக ஓடி தப்பி உயிர் பிழைத்தனர். அருகாமையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்த அப்பகுதி வனத்துறை காவலர்கள் உள்ளூர்வாசிகளின் துணையுடன் அந்த சிங்கத்தை தேடி வந்தனர்.
விடாமல் பெய்த பெருமழைக்கு இடையில் சுமார் 15 மணி நேரமாக தேடுதல் வேட்டை நடத்திய இந்த குழுவினர், நேற்று நள்ளிரவு வேளையில் அந்த சிங்கத்தை கண்டு பிடித்தனர். துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி, அந்த சிங்கத்தை மயங்க வைத்தனர். பின்னர், கூண்டில் அடைக்கப்பட்ட அந்த சிங்கம் அருகாமையில் உள்ள வனப்பகுதியில் இன்று திறந்து விடப்பட்டது.
இதற்கிடையில், இதே அம்ரேலி மாவட்டத்தில் புதைக்குழி சேற்றில் சிக்கிய ஒரு பெண் சிங்கம் பிணமாக கிடந்தது. மழை வெள்ளத்தால் கிர் காட்டுப்பகுதியில் உள்ள ஆசிய சிங்கங்கள் காப்பகத்தில் இருந்து தப்பி வந்த சுமார் 50 சிங்கங்கள் அம்ரேலி மாவட்டத்தில் காடுகளை ஒட்டியுள்ள 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் ஊடுருவியுள்ளதாக கருதப்படுகின்றது.
Average Rating