ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் தொடர்புடைய 7 வன ஊழியர்கள் கைது!!
ஆந்திர மாநிலத்தில் செம்மரக் கடத்தல் வழக்கில் வனத்துறையைச் சேர்ந்த 7 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடப்பா போலீசாரும், செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் இணைந்து நேற்று மாலை திருப்பதி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, வனத்துறையின் அடிவார முகாம் ஊழியர்கள் சாகர், ராமலிங்க ரெட்டி, பால ஒபுலேசு ரெட்டி, ஆஞ்சநேயலு, பீட்டர், தேவதாஸ், உதவி பீட் அலுவலர் ராமச்சந்திர ரெட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.9.228 லட்சம் மதிப்பிலான 14 செம்மர கட்டைகள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த கடத்தல் சம்பவத்தில் மேலும் பல ஊழியர்களுக்கு தொடர்பிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல் நேற்று அட்லூர் மண்டல் பகுதியில் உள்ள வெங்கடாபுரத்தில் ராஜேஸ்வரி என்ற பெண்ணை கைது செய்து அவரிடம் இருந்து 17.2 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரங்களை பறிமுதல் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating