லவ் பண்றேன்னு ஏமாற்றுகிறார்கள்: ஓமலூர் என்ஜினீயர் கோகுல்ராஜ் கடைசியாக செல்போனில் பேச்சு!!
சேலம் மாவட்டம் ஓமலூர் என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 23) நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள தொட்டிப்பாளையம் என்ற இடத்தில் முகம் சிதைந்த நிலையில் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். பிணத்தை ரெயில்வே போலீசார் மீட்டு விசாரித்தனர்.
கோகுல்ராஜ் சாவை அறிந்த அவரது பெற்றோரும், உறவினர்களும் திருச்செங்கோடு வந்து சாலை மறியல் செய்தனர். இதனால் கோகுல்ராஜ் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டது. கோகுல்ராஜ் சாவை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும், கோகுல்ராஜின் குடும்பத்துக்கு நிவாரண தொகையாக ரூ.50 லட்சம் தரவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சேலத்தில் சாலைமறியல் செய்தும், உண்ணாவிரதமும் இருந்தனர்.
இவர்களை போலீசார் கைது செய்து நேரு கலையரங்கத்தில் தங்க வைத்தனர். இங்கும் இவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.
கோகுல்ராஜ் சாவு குறித்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் குணசேகரன், தனிதாசில்தார் ரகுநாதன் ஆகியோர் நேற்று சேலம் வந்தனர். பின்னர் இவர்கள் நேரு கலையரங்கத்தில் உண்ணாவிரதம் இருந்து வரும் கோகுல்ராஜின் தாயார் சித்ராவை சந்தித்து அரசு சார்பில் ரூ.5 லட்சத்து 62 ஆயிரத்து 500–க்கான காசோலையை நிவாரண தொகையாக வழங்குவதாக கூறி வழங்கினர். இதை சித்ரா கண்ணீருடன் பெற்று கொண்டார்.
இன்று 3–வது நாளாக சித்ராவும், அவரது குடும்பத்தினரும் விடுதலை சிறுத்தை கட்சியினரும் நேரு கலையரங்கத்தில் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். கோகுல்ராஜ் சாவை கொலை வழக்காக பதிவு செய்யப்படும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் என்ஜினீயர் கோகுல்ராஜ் கடைசியாக பேசிய பேச்சு செல்போனில் பரவி உள்ளது. இதில் அவர் பரபரப்பாகவும், பதட்டத்துடனும் பேசி உள்ளார்.
இதில் அவர் கூறி இருப்பதாவது:–
எல்லா பொண்ணுங்களும் பொய்யா பேசுறாங்க, லவ் பண்றேன்னு சொல்லி ஏமாற்றுறாங்க, யாரிடமும் பழகாதீங்க, இனியாவது என்னைப்பார்த்தாவது திருந்துங்க, எனக்கு இந்த பொய்யான உலகத்தில் இருக்கவே பிடிக்கவில்லை.
நான் எங்க அப்பா இருக்கிற இடத்திற்கே போகிறேன். அம்மா, தம்பி எல்லாம் நல்லா இருங்க. இந்த பூமியில் வாழ பிடிக்கவில்லை, என்னை பார்த்தாவது எல்லாரும் திருந்துங்க, பொய்யான பொண்ணுங்களை நினைத்து வேஷ்டா வாழ்க்கையை வீண் பண்ணாதீங்க, என்னோட முடிவுத்தான் உங்க எல்லாத்துக்கும்.
இவ்வாறு செல்போனில் கோகுல்ராஜ் பேசி உள்ளார்.
கோகுல்ராஜின் இந்த செல்போன் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating