காவலுக்கு சென்ற போலீஸ் கண்ணில் மிளகாய்த்தூளை தூவிவிட்டு கொலை குற்றவாளி தப்பியோட்டம்!!
பீகார் மாநிலத்தில் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து செல்லப்பட்ட கொலை குற்றவாளி காவலுக்கு உடன்சென்ற போலீஸ்காரரின் கண்களில் மிளகாய்த்தூளை தூவிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு சம்ப்ரான் மாவட்டத்தில் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த கொலை தொடர்பாக இங்குள்ள மெட்னி தோலா பகுதியை சேர்ந்த நெயாஸ் கான் என்பவனை போலீசார் தேடி வந்தனர். இவ்வளவு நாட்களாக சிக்காமல் இருந்த இவனை சமீபத்தில் கைது செய்த போலீசார், இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
பின்னர், கோர்ட் வளாகத்தில் உள்ள ‘லாக்அப்’ அறைக்குள் அடைப்பதற்காக அவனை அழைத்து சென்றனர். அப்போது பேண்ட் பாக்கெட்டின் உள்ளே ஒரு பிளாஸ்டிக் உறையில் மறைத்து வைத்திருந்த மிளகாய்த்தூளை காவலுக்கு வந்த தலைமை போலீஸ்காரர் சந்திரசேகர் பஸ்வான் என்பவரின் கண்களில் தூவிவிட்டு கோர்ட் வளாகத்தில் இருந்து அவன் தப்பியோடி விட்டான்.
முன்னதாக, நீதிபதியிடம் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்டபோது, கோர்ட் வளாகத்தில் பீடா கடை நடத்திவரும் ஒருவர் அவனிடம் ஒரு பிளாஸ்டிக் உறையை தந்துள்ளார். அதில் இருந்த மிளகாய்த்தூளை தூவிவிட்டுதான் நெயாஸ் கான் தப்பியோடி விட்டான் என கருதும் போலீசார், அந்த பீடா கடைக்காரரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating