ஹேமமாலினியுடன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருந்தால் எங்கள் குழந்தை பிழைத்திருக்கும்!!
ராஜஸ்தானில் பிரபல பாலிவுட் நடிகையும் மதுரா தொகுதி எம்பி-யுமான ஹேமமாலியின் மெர்சிடஸ் பென்ஸ் கார், ஆல்டோ கார் மீது மோதியதில் 4 வயது சிறுமி சோனம் பரிதாபமாக பலியானார்.
பாலிவுட் நடிகை ஹேமமாலினி(66) மதுராவில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூருக்கு நேற்று தனது மெர்சிடஸ் பென்ஸ் காரில் சென்றார். காரில் அவருடைய உதவியாளர் இருந்தார். காரை அவரது டிரைவர் மகேஷ் தாகூர் ஓட்டினார். கார் தவ்சா என்ற இடத்தில் வந்தபோது மெர்சிடஸ் காரும் ஜெய்ப்பூரில் இருந்து லால்சோத் சென்று கொண்டிருந்த ஆல்டோ காரும் நேருக்கு நேர் மோதியது. ஆல்டோவில் ஹனுமன் மஹாஜன், அவரது மகள் சோனம்(4), மகன் சோமில்(5), மனைவி ஷிகா(35), சீமா(40) ஆகியோர் இருந்தனர்.
விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே ஹேமமாலினி காரில் போர்டிஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் ஆல்டோவில் வந்தவர்கள் நடிப்பு, அரசியல் துறையில் இல்லாத அப்பாவி பொதுமக்கள் என்பதால் போலீஸ் வந்த பிறகே அவர்களை எஸ்.எம்.எஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பாகவே 20 நிமிடங்கள் வரை உயிருக்கு போராடிய சோனம் இந்த உலகை விட்டுச் சென்றுவிட்டாள்.
இந்நிலையில் விபத்தில் அடிபட்ட குழந்தையின் மாமா குப்தா, “ஹேம மாலினியைக் கொண்டு சென்ற காரிலேயே குழந்தையையும் கொண்டு சென்றிருந்தால் அவள் இந்நேரம் உயிரோடு இருந்திருப்பாள்.” என்று கூறியுள்ளார்.
காரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஹேமமாலியின் டிரைவர் மீது மஹாஜன் புகாரளித்ததையடுத்து அந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர். கார் விபத்தால் நடிகை ஹேமமாலினிக்கு காயம் ஏற்பட்டதையே தாங்கிக் கொள்ள முடியாத இளகிய மனம் கொண்டவர்களை 4 வயது குழந்தை துடிதுடித்து இறந்தது சிறிதளவும் பாதிக்காதது நிச்சயம் ஆச்சர்யமான ஒன்றுதான்.
Average Rating